உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறருரை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

267

தாம் உரைக்கும் மரபுவழி உரைக்கு வேறுவகையாலும் உரை கூறுவாரை ‘இன்னொரு சாரார் இவ்வாறுரைப்ப' என்பார் பேராசிரியர் (செய். 11). ஆசிரியர் கூறும் இவ்விலக்கணம் பிறரால் இப்பெயரால் கூறப்படும் என்பதையும் சுட்டுதல் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்று. வடநூலாசிரியர் வழிமுறை இன்னதெனக் காட்டலும் உண்டு.

அசையும் சீரும் இசையொடு சேர்த்துதல் என்பதை வகையுளி என்று பிறர் கூறுவதைச் சுட்டுதல் முன்னதற்கு எடுத்துக்காட்டாகும் (செய்.11). குரு, இலகு என்பவற்றைச் சுட்டிப் பிரத்தாரம் முதலாக எடுத்துக் காட்டுவது பின்னதற்குச் சான்று (செய். 51).

சொற்பொருள் விளக்கம்

சொற்பொருள் விளக்கம் தருதலில் பேராசிரியர் தனிச்சிறப் புடையவர். இவர் தரும் சொல் விளக்கத் தூண்டல் வழியாகவே "உரை யாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்" என்றொரு நூல் எம்மால் தொகுக்கப்பட்டது. அதன் முன்னுரையில் "மெய்ப்பாடு என்னும் சொல் முதலாக அப்பேராசிரியர் தரும் சொற்பொருள் விளக்கம் ‘நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து' தமிழ்ச் சொற்களின் தனியுயர் மாண்பில் தோய்ந்து கிடக்கச் செய்தது. அன்றே (ஆண்டு 1951) சொற்பொருள் விளக்கவித்து என்நெஞ்சத்தில் ஊன்றப் பெற்றது" என்பது அது. அப்பேராசிரியர் உரையால் நாம் முதற்கண் பெறவாய்த்தது ‘மெய்ப்பாடு' என்னும் சொல்லின் விளக்கம்.

"மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோ ராற்றான் வெளிப்படுதல்" என்பது (மெய்ப்.1).

"கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே"

என்னும் நூற்பாவில் (மெய்ப். 9),

'வீரத்தைப் பெருமிதம் என்றெண்ணினான். என்னை? எல்லா ரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதம் எனப்படும் என்றற்கென்பது.

கல்வி என்பது, தவமுதலாகிய விச்சை.

தறுகண் என்பது, அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமை.

இசைமை என்பது, இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும்

பழியொடு வருவன செய்யாமை.