28
நிலவரம்பு
இளங்குமரனார் தமிழ்வளம் – 19
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்"
என்று அது கூறும் நிலவரம்பு, இன்று தமிழர்க்கு உண்டா? தமிழரால் அதனைக் காக்க முடிந்ததா? தோல் இருக்கச் சுளை விழுங்கிய சான்று அல்லவா அது!
வடவேங்கடம் மலைதானே. தென்குமரியும் மலையாகத்தானே இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள தென்குமரி எல்லை இல்லையே அது. “பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
என்று சிலப்பதிகாரத்தால் அறியப்படும் குமரிக்கோடு அல்லவோ அத் தென்குமரி.
வடவேங்கடம் மொழித் திரிபால் நம்மை விட்டுப் போயது என்றால், கடல் கோளால் போயது அல்லவோ குமரிக்கோடு! (கோடு-மலை).
எப்பொழுது ஒரு மண் தன்மொழியை இழக்கின்றதோ அப்பொழுதே தன் மண்ணையும் இழந்து போகின்றது. அதனால்தான் பரிபாடல் என்னும் தொகை நூல்,
"தண்தமிழ் வேலித் தமிழ் நாட்டகம்” என்றது. அதனையே முற்படக் கூறியது தொல்காப்பியப் பாயிரம். “தமிழ் கூறு நல்லுலகம்” என்பது அது.
தமிழ் கூறுதல் இல்லாத மண் எப்படித் தமிழ் மண்ணாக இருக்கும்? தமிழ் கூறும் மண்ணாக இருந்ததன் தடமும் தெரியாமல் அழிக்க அண்டை மாநிலங்களாகிய ஆந்திரம் கருநாடகம் கேரளம் ஆய மூன்றும் முன்னரே திட்டமிட்டுச் செய்த மண்பறிப்பு, மேலும் தொடர்வதை அன்றி மீட்கப் பெற்றது உண்டா?
அண்டை அயலார்,
“எடுத்தவை எல்லாம் போகக்
கிடைத்தவை எம்பேறு”
என்று கொள்ளப்பட்டதுதானே இத் தமிழ்நாடு?
மொழியின் உயிர்ப்பு
ஒரு மொழியின் வளர்ச்சியும் வாழ்வும் அதன் நூல்களிலே மட்டுமோ உள்ளது? அதன் உயிர்ப்பும் உரனும் பொதுமக்கள் வாயில் அல்லவோ உள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளாத மண், அம்மொழி