தமிழ் வளர்த்த தாமோதரனார்
163
தம் நூல்களில் மறுத்ததை அன்றித் தனியே மறுப் பெழுதாமைக்குக் காரணம் அவ்வாறு செய்யும்படி முனிவரைத் தூண்டுவாரின்மையே என்று கூறும் வகையால், சூறாவளிக்குத் தூண்டினார் உண்டு என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.
தாமோதரனார் திருவாவடுதுறைத் தொடர்பு மிக்கிருந்தும், அதன் உதவியை நாடித் தேடிப் பெற்றிருந்தும் பெறும் நிலை இருந்தும், 'ஐந்தெழுத்தால் ஒரு பாடை' எனக் கூறிய சுவாமிநாத தேசிகரை மாழ்கி (மயங்கி) யுரைத்தவராகச் சுட்டிக் கண்டிக்கவும் செய்கிறார்.
இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையவராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும் அம் மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிது மொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எப்பாஷைக்கும் சிறப்பெழுத்துச் சில்லெழுத்தேயாம். உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்து உச்சரிக்கும் ஐவர்க்கத்தையும் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத் தாலொரு பாஷை இன்றே என்று சமஸ்கிருதத்தையும் புரட்டி விடலாமே; இங்கிலீஷ் பாஷையில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் கு, ண இரண்டாதலால், இரண்டெழுத்தாலொரு பாஷை இன்றே என அதனையும் மறுப்பார் போலும்! இரண்டற்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங்குற்றமாம் என்கிறார். தமிழ் தனிமொழி என்றும் அதன் தனித் தன்மை இன்னது என்றும், கலப்பின் இயல்பு இன்னது என்றும் கூறி, 'இஃது எத்தேசத்து எந்தப் பாஷையினது அநுபவத்திற்கும் யுக்திக்கும் முழு விரோதம் என்க என முடிக்கிறார்.
ஈ. இலக்கிய வரலாற்று ஆய்வு
J
தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு கொள்ளும் தாமோதரர் "அபோத காலம், அக்ஷரகாலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதார காலம், சமண காலம், இதிகாசகாலம், ஆதீனகாலம் என எண் கூறுபடும்" என்கிறார்.
வரிவடிவின்றி ஒலிவடிவு மாத்திரமாய் நிகழ்ந்த காலத்தை அபோத காலம் என்கிறார். அஃது அகத்தியர்க்கு முன்சென்ற காலம் என்கிறார். அக்காலத்தே (அகத்தியர்க்கு முன்னரே) தமிழ் எழுத்தும் மொழியும் இருந்தன என்று விளக்குகிறார்.