பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்
41
பொருளை மதியாமல் நடந்து கொண்டாரே என்ற கவலையும் அவருக்கிருந்தது. சிலநாள்களுக்குள் சண்முகனார், தேசிகர் மனநிலையை அறிந்தார். பிறர் துன்புறுதலை மறந்தும் விரும்பாத சண்முகனார் திருவாவடுதுறைக்குச் சென்று தேசிகரிடம், பெண்ணின் ஏழ்மை நிலையையும், உடை வழங்க வேண்டி ஏற்பட்டதையும் தெளிவாக அவர் கேட்கு முன்னரே கூறினார். தேசிகர் சண்முகனார்உரையை ஏற்றுக் கொண்டார். எனினும் "உயரிய பரிசுகளை மதித்துப் போற்றிக் காப்பதே பெருமை, இனியேனும் அவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்" என்று வற்புறுத்தி மற்றுமொரு பட்டாடை அளித்துச் சிறப்புடன் அனுப்பிவைத்தார்.
சன்மார்க்க சங்கம்
பண்டிதமணி கதிரேசச் செட்டியார், மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சங்கம் எனவோர், சங்கம் ஏற்படுத்துமாறு விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை அவ்வூர் மக்களைக் கொண்டு செய்து முடித்தார். ஆண்டுதோறும் நடத்திவரும் திருநாவுக்கரசர் குருபூசை விழா 13-5-1909 இல் நடைபெற்றது. அதற்கு மறுநாள் சங்கத்தைத் தொடங்கி விடவேண்டும் என்பது பண்டிதமணி முதலானோர் திட்டம். அதற்கு வாய்ப்பு இருக்குமாறு, குருபூசை விழாவுக்கு அரசஞ் சண்முகனார், மு. ரா. கந்தசாமிக் கவிராயர், கீழைச் செவற்பட்டி வீமகவிராயர், தேவகோட்டை வித்துவான் வேற்கவிராயர், விருதைச் சிவஞான யோகிகள் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர். பண்டித மணிக்குச் சண்முகனார் மீது தணியாப் பற்றும் மதிப்பும் பேறும் உண்டன்றோ! அதனால் தமிழ்மணியாம் சண்முகமணியைக் கொண்டே சன்மார்க்க சங்கத்தைத் தொடங்கிவைக்கச் செய்தார். அப்பொழுது சண்முகனார், நகரத்தார் செய்யும் நற்செயல்களைப் பற்றியும், பண்டித மணியின் பண்பு நலம் பற்றியும், சன்மார்க்க சங்கம் பற்றியும் ஒன்பது பாடல்கள் பாடினார்.
“நகரத்தார் எவ்வாறு நல்லறங்கள் பலசெயினும் நாட்டிற் கல்வி
பகரத்தான் பரவாத பான்மைதெரிந் திக்குறையும் பாற்ற நாடி
ஒகரத்தார்வேள்பின்னும் வாய்பேசி வணிகர்குலத் துதித்தா லன்ன