4. நீதிபதிகள் நிலைமை
நீதிபதியைக் காப்பதற்குரிய தலைமை இடத்தில் தகுதியான பொறுப்பில் அமர்ந்திருப்பவர் நீதிபதி ஆவர். அவர் சொல்லும் சொல் ஒவ்வொன்றும் நன்மையோ தீமையோ உடனுக்குடன் விளைவிப்பன. ஆதலால் அவர் தம் சொல்லையும் செயலையும் பொன்னேபோல் போற்றுதல் வேண்டும்.
வேதநாயகர் நீதித்துறையில் ஈடுபட்டவர்; நீதிமன்றத்து மொழிபெயர்ப்பாளராக இருந்து முன்சீபாகவும் பல்லாண்டுகள் பணியாற்றினார். நீதிமன்ற நடவடிக்கைகளையும் சட்டங் களையும் தமிழாக்கம் செய்தார். ஆகவே அவர், நீதிபதிகளைப் பற்றி உரைத்துள்ள உரைகள் கருத்தில் இருத்தத் தக்கனவாம்.
'குறித்த காலத்தில் நீதிபதிகள் மன்றங்களுக்குச் செல்வது இல்லை. எப்பொழுது வருவார் எப்பொழுது வெளியே போவார் என்பது எவருக்கும் தெரியாது. ஆதலால் பொதுமக்கள் நாள் முழுமையும் காத்துக் கிடக்க நேரிட்டது. பொழுதெல்லாம் காத்துக் கிடந்தால் கூட திடுமெனத் தோன்றிக் 'கட்சிக்காரர் வரவில்லை' என்று வழக்கைத் தள்ளி விடுவார். வந்து இருந்தவர் வழக்கும் விசாரிக்கப்படுவது இல்லை.
'குற்றத்தின் அடிப்படையை உணராமலே வழக்கறிஞர் சொல்லைக் கொண்டே முடிவு வழங்குவதும். சரியான சான்றுகள் இல்லை என்று தள்ளுபடி செய்வதும் எங்கும் எளிதாக நடை பெற்றன. பல வழக்குகளை ஒரே வேளையில் எடுத்துக் கொண்டு எதையும் தீர ஆராயாமல் முடிவு செய்தனர். சாட்சிகளை உருட்டியும், மருட்டியும் அவர்களிடம் சொல்லை வாங்கி முடிவு கூறினர். வழக்காளிகளைப் பார்த்த உடனேயே அவர்மேல் தவறான எண்ணங் கொண்டு முடிவு கூறுவதும் உண்டு; இவ்வா றெல்லாம் நீதிபதிகள் இருந்தனர்" என்று வேதநாயகர் கூறியுள்ளார். அதிக காரிகள் பொதுமக்களின் ஊழியராக இருக்கத் தக்கவரே அன்றித் தலைவர் அல்லர்" என்பது வேதநாயகர் துணிபு. அதனை எங்கும் எவரிடத்தும் உரைக்கச் சிறிதும் அஞ்சினார் அல்லர். உரையாக எழுதியும், கவியாகப் பாடியும் இக் கருத்தைப் பரப்பினார்.