உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 22

நடப்பார்களானால் திரும்பவும் தமதுடம்பை உரம்பெறச் செய்து எல்லா மக்களும் இனிது வாழ்வர் என்பது திண்ணம் என றுதி சொல்கின்றார்.

இயற்கையாக உண்டாகும் இடி, மின்னல், மழை, தீ, நில அதிர்ச்சி,பாம்பு, புலி இன்னவற்றால் ஏற்படும் எதிர்பாராத் துயர்களையும் அருளொளியில் அழுந்தி நிற்கும் அறிவால் வருமுன்னே விலக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தம் வாழ்வியற் சான்றுகொண்டு விளக்குகிறார் அடிகளார் :

வருமுன் விலக்கல் :

ஒரு முறை யாம் பலமனேரி யென்னும் ஊரிற் குறுங்காட்டின் நடுவிலுள்ள மாளிகை ஒன்றில் தங்கியிருக்குமாறு நேர்ந்தது. ஒருநாள் இரவு அதில் யாம்படுத்து உறங்குகையில் ஒரு பாம்பு வந்து எமது கையிற் கெளவுவதாகக் கனவு கண்டு சடுதியில்விழித்துப் பார்க்க, உண்மையாகவே ஒரு கரும்பாம்பு எமது வலது கைம் மேற்புறத்தைக் கௌவிப் பல்லை அழுத்தும் நிலையில் இருந்தது. உடனே அதனைத் தப்பி அப்புறம் எழுந்து போய் உயிர் பிழைத்தேம்.

மற்றொரு முறை திருநெல்வேலியில் ஒரு வீட்டில் தக்கார் பலரொடு நல்லுரைபேசிக் கொண்டு சுவர்மேற் சாய்ந்து உட்கார்ந்திருந்தேம். அவ்வாறிருக்கையில், அந்தச் சுவரின் அடியில் ஒரு தேள் இருப்பதாக எமக்குச் சடுதியிலே ஒரு நினைவு தோன்றிற்று; உடனே பேச்சை நிறுத்தி அப்புறம் நகர்ந்து திரும்பிப் பார்க்கப் பெரிய கருந்தேள் ஒன்று எமக்குப் பின்னே இருந்தது; அதற்குத் திருவருள் உதவியால் தப்பிப் பிழைத்தேம். இங்ஙனம் யாம் தப்பிப் பிழைத்து வருகின்ற நிகழ்ச்சிகள் பல உண்டு" என உள்ளொளியால் உணரப்படும் பாதுகாவலை உரைக்கிறார்.

மூச்சுப் பயிற்சி :

பிராணவாயு என்பதை உயிர்க்காற்று என மொழியாக்கம் செய்கிறார் அடிகளார். உடம்பைப் பாதுகாத்தற்கு வேண்டி முதற்பொருள்கள் அத்தனையும் பிராண வாயுவிலேயே இருக்கின்றன என்கிறார்.

நாற்றக் காற்றால் நுரையீரல் சுருங்கிப் போய், அப்படியே சுருக்கமாகி நின்றுவிடும் என்பதை நுரையீரலுக்கு வந்த தீங்கு என்கிறார்.