உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

33

சுட்டுகிறார்: "இம் முல்லைப்பாட்டு கி.பி. 1903 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம் முல்லைப் பாட்டிற்கும் உரைவிரித்து உரைக்கலானோம். இச்செய்யுட்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரையையும் கூடவே விளக்கி வருகையில் செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண் முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடு ஒன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவார் ஆயினர். அதுவேயும் அன்றி, ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடைமொழிகளையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினியருரை சிறிதும் ஏல உரையேயாம் என்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தை யொட்டி வேறோர் உரை செய்து வைத்திருந்தயாம் அதனை யெடுத்து அவர்க்கு விளக்கிக் காட்டினேமாக அது கண்டு அவரெல்லாம் 'தமதுரை ஆக்கியோன் கருதிய பொருளை நேர்நின்று விளக்குவதோடு பண்டைக் காலத்துத் தண்டமிழ்ச் சிறப்புகளைப் பின்றைக் காலத்துக் கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ்வாராய்ச்சி யுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும்' எனக்கேட்டு அது பதிப்பித்தற்காம் செலவும் ஒருங்கு சேர்ந்து முன் உதவினர்.”

ம்

"கி.பி. 1906 ஆம் ஆண்டு கலைநூல் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப் பாட்டுகளில் ஒன்றான பட்டினப் பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாடமாய் வந்தது. யாம் முல்லைப் பாட்டிற்கெழுதிய ஆராய்ச்சியுரையினைப் பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக்கர்களும் தமக்குப் பாடமாய் வந்த 'பட்டினப்பாலைக்'கும் அதனைப் போலவே ஓர் ஆராய்ச்சியுரை எழுதித் தரும்படி வேண்டி, அதனைப் மதிப்பிடுவதற்காம் செலவின் பொருட்டு தாமும் ஒருங்குசேர்ந்து பொருளுதவி செய்தனர்" என்கிறார். மாணவர் நலங்குறித்து வரையப்பட்ட இந் நூல்களின் உரைமாட்சி என்ன வகையில் உதவியது என்பதையும் அடிகளார் அவ்வுரையில் காட்டுகிறார்: