ஈரோடு வேலா (வரலாறு)
183
தொலைபேசித் தொடர்பு கொண்டார். வேலா உடனே அங்கே வந்து காண்பதாகக் கூறினார். இருவரும் நான் வருவேன் நான் வருவேன் என முதலில் புறப்பட்டு வழிப்போக்கில் கண்டு பின்னர் வேலகத்திற்கு உடன் வந்தனர். அப்பொழுது மூதறிஞர் "தமிழுக்குத் தொண்டு செய்பவர்களை அவர்கள் வாழும் இடத்திற்கு வந்து கண்டு செல்லுதலே சால்பு" என்று தம் வருகைக்குரிய முற்கோளை உரைத்தார். பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஒருவர் வழியே கேட்கும் செய்தியா இது?
திங்கள் கொடை
பெருந்துறை மேனிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா அதில் பங்கு கொள்ள வேலா சென்றார். பேச்சு -எழுத்துத் திறத்தில் வல்ல மாணவன் ஒருவன் பரிசுகள் சில பெற்றான் அவன் ஆற்றல் வேலாவுக்கு மகிழ்வு தந்தது. அம்மாணவன் வறிய நிலையையும் ஆசிரியர்கள் தந்த உதவி ஊக்கங்களையும் அறிந்த வேலா, அம்மாணவன் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய விருப்பம் அறிந்து பாராட்டினார். அவன் அக்கல்வி பயிலும் காலம் முழுமையும் திங்களுக்கு உருபா 100 தருவதாக உறுதி யளித்தார். அவ்வாறே மருத்துவக் கல்லூரியில் இடம் வாய்த்துப் பயின்ற அவனுக்கு அக்காலமெல்லாம் அவ்வாறே புலவர் வேலனார் வழியாகத் தொகை உதவி வந்தார்! படிக்கும் பருவத்தில் வறுமைத் துடிப்பு இருத்தல் ஆகாது என்னும் பேரெண்ணமுடைமையால் வேலா இவ்வாறு பலர்க்கு உதவி யுள்ளார். நல்ல ஒருவர் உருவாதல் நாட்டுக்கு வளமே யல்லவோ! ஓதல் கொடை
வடி
புதுவையிலே குறளாய மாநாடு; இளஞ் செல்வர் இருவர்; இருவரும் உடன்பிறந்தார். அவர்கள் தம் பள்ளிக் கல்வியின் ஊடே திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியும் நடத்தினர். வேலா, அவர்களை ஊக்கும் வகையால் பாராட்டுரைத்து 100, 100 உருபா பரிசு வழங்கி மகிழ்வித்தார். அவ்விழாவிலே திருக்குறள் தொண்டர் பெருமக்களுக்குப் பாராட்டு நிகழ்ந்தது. அவர் பெயரே திருக் குறள் பெருமாள். அவர்க்குப் பொன்னாடை போர்த்திப் புகழ்மாலை சூட்டியதுடன் அவர்க்கு உதவும் வகையில் தொகையும் வழங்கினார். தேடுவளம் ஊருணியாய்ப் பயன் மரமாய்ப் பிறர்க்கு உதவியாக அமைதல் என்னும் குறிக்கோள் நெஞ்சம் இத்தகு கொடைகளால் இனிது விளங்கும்.