குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா
'காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இருந்ததன் பயனே."
241
என்று கூறும். "இன்ப நுகர்வு நிறைந்து முதிர்ந்த நாளில் தாம் கொண்டிருந்த இல்லறக் கடமையைத் தம் மக்கள் மேற் கொள்ளச் செய்து, தம் சுற்றத்தினருடன் தலைவன் தலைவியர் ஆகிய இருவரும் சிறந்த பொதுநலப் பணிகளில் ஈடுபடுதலே அம்முதுமைச் சிறப்பின் பயனாகும் என்பது இதன் பொருளாகும்.
இவ்வகையில் குடும்பத்தைச் செவ்விய முறையில் நடத்தி நன்மக்களைப் பெற்று, அவர்களுக்கு வேண்டும் கல்வியும் தொழிலும் வளமும் வாழ்வும் அமைத்த முத்துவும் சாமியும் உரிய காலங்களில் உரிய வகையில் மக்களுக்கு நன்மணமும் முடித்து வைத்து அவர்களும் மக்கட் பேற்றில் விளங்கச் செய்தனர். ஓர் அவலம் :
மேடும் பள்ளமும் சுழலும் இல்லாமல் இயல்பாக ஓடும் ஆற்றிலும், திடுமெனப் பெருகும் வெள்ளப் பெருக்கால் மேடு பள்ளங்களும் சுழல்களும் ஏற்படுவது உண்டு! அவ்வாறே, நான்கு மக்களுக்கும் மங்கல மனையறம் செய்வித்து மகிழ்ந்த அன்னை சாமியாத்தாள் தம் 60 ஆம் அகவையை எட்டி மணிவிழாக் காண வேண்டும் பொழுதில் 25-8-1985-இல் மாரடைப்புக்கு ஆட்பட்டுத் திடுமென இயற்கை எய்தினார்.
குடும்பம் கொண்ட கவலைக்கு எல்லையேது! ஈருடல் ஓருயிராய்த் திகழ்ந்த துணைவர் துயர்க்கு அளவேது! பெற்றவர் இழப்புப் போலப் பிள்ளைகளுக்கு இழப்பும், மனைவியார் இழப்புப் போலக் கணவர்க்கு ஓர் இழப்பும் உண்டா? தளர்ச்சிக்கு ஊன்றுகோல் உதவுவதுபோல் முதுமைக்கு இன்றியமையாதது துணை நலம். அத்துணை நல இழப்பு வீட்டளவில் இருப்பாரை வாட்டியே தீரும்.வீட்டோடு நாட்டுத் தொடர்பும் நல்லியல் தொண்டும் உடையாரை வருத்தினாலும் வாட்டி விடுவது இல்லை. அவர்கள் தம் துயரைத் தொண்டாலே மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றுவிடுவார்கள்.