3. ஆதரவு வளர்ந்தது; ஆபிரகாமும்
வளர்ந்தார்
“எந்தத் தொழில் செய்வதும் இழுக்கல்ல” என்ற எண்ணம் இளமைமுதலே ஆபிரகாமினிடம் அரும்பியிருந்தது. ஒரு தொழில் இல்லாவிட்டாலும் ஒரு தொழில் செய்து பிழைக்கும் படியாகப் பற்பல தொழில்களில் பயிற்சி பெற்றிருந்தார். எந்தப் புது வேலையையும் எளிதில் அறிந்து கொள்ளும் திறமை இருந்ததனால் அவருக்கு எப்படியாவது வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. படகோட்டி
முதலாவதாகக் கூலிக்குப் படகோட்டும் தொழிலைத் தொடங்கினார். பின்னர்ப் பண்ணை ஒன்றிலே பணியாளாக அமர்ந்தார். செல்வர் ஒருவரின் வீட்டிலே ஏவல்கேட்கும் எடுபிடி யாளாகப் பணிபுரிந்தார்."எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்" லிங்கன் மனம்இருந்தது புத்தகத்தில் தான். படுத்துக் காலாட்டிக் கொண்டே மணிக் கணக்காகப் படிப்பார்; நடந்து கொண்டும் படிப்பார்; வயல் வெளிகளிலும் மரத்தடிகளிலும் உட்கார்ந்து பலபேரைக் கூட்டி வைத்து விகடங்கள் கூறுவார்; தருக்கம் செய்வார். இவற்றை நயந்தவர்கள் பலர்; பொறாமையும் போட்டியும் கொண்ட வர்கள் சிலர்; அடுத்தவர் புகழ்வதைப் பற்றியோ பழிப்பதைப் பற்றியோ நினைக்காத நெஞ்சம் லிங்கனிடம் இருந்ததால் பாடுபடவும் செய்தார்; பாடுபட்டுக் கொண்டே படிக்கவும் செய்தார்.
வணிகக் கூலி
ஜோன்ஸ் என்பவர் ஒரு வணிகர். அவருக்குப் பலதுறை வணிகங்கள் உண்டு. புத்தக வணிகமும் புரிந்து வந்தார். இதனை அறிந்திருந்த லிங்கன் ஜோன்ஸ் கடையிலே சிப்பந்தியாகச் சேர்ந்து கொண்டார். பலதொழில் அனுபவம் உடைய லிங்கனை வேலைக்கு வைத்துக் கொள்வதிலே ஜோன்ஸ் மகிழ்ச்சியுற்றார். லிங்கன், கடைக்கு வருபவர்களிடம் புன் முறுவலோடு பேசுவார்; பணிவோடு