5. மேரிக்கு எக்களிப்பு மேதைக்குத்
தத்தளிப்பு
ஆபிரகாம் சட்ட சபைக்குள் நுழைந்த பின்னர்ச் சிலருள்ளத்தே 'விடுதலை' எழுச்சி ஏற்பட்டது. அதன் முன்பெல்லாம் நீக்ரோவருக்கு விடுதலைகூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட லிங்கனது கட்சியிலே சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தனர். அடிமை முறை அவசியம் இருக்க வேண்டுமென்று அன்று எண்ணிக் கொண்டி ருந்தவர்கள்கூட வாய்விட்டுரைக்க வெட்கினர். அவ்வளவு தூரம் ஆபிரகாம் கொள்கைக்கு ஆதரவு தலைகாட்டலாயிற்று. ஆயினும் அரசியலில் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருந்த தலைவர்களுள் எண்ண வேற்றுமை மிகுந்திருந்தது.
டக்ளஸ்
இந்நிலைமையிலே லிங்கனின் நேரடியான எதிரி என எல்லோராலும் கருதப்பட்டடக்ளஸ் என்பவர் அடிமை முறையின் அவசியத்தைப்பற்றிக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். வடநாட்டில் அடிமை ஒழிப்புக்காகத் திரளும் புரட்சியை அளவு கடந்து தாக்கினார். குறிப்பாக ஆபிரகாமைக் கூட்டங்களிலெல்லாம் நேரடியாகத் தாக்கிப் பேசவும் ஆரம்பித்தார். அதனால் ஆபிரகாம் டக்ளஸ் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்ற அடிமை ஒழிப்பு முறையின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டிய நிலைமைக்கு ஆட்படலானார். ஆபிரகாமையும் நீக்ரோ இனத்தவரெனக் கேலி பண்ணினர். அவர் போகும் இடங்களிலும் பேசும் கூட்டங்களிலும் நீக்ரோப் பொம்மைகளை எடுத்து வீசினர்.
எதனையும் பொறுத்துக் கொள்ளும் இதயம் படைத்த லிங்கன் "மனிதன் தன்னலம் தான் அடிமை முறையை வேண்டு கின்றது; ஆனால், மனிதனது சுதந்திர உள்ளமே விடுதலையைத் தூண்டுகின்றது" என்று போனபோன இடங்களிலெல்லாம் வற்புறுத்தி வந்தார்.