உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்
59
போகின்றேன். ஆனால் இன்று ஆயிரமாயிரம் பேர் என்கையைக் குலுக்கிய காரணத்தால் கை வலியெடுத்து நடுங்குகின்றது. நடுக்கத்துடன் கையெழுத்திடும் இக் காட்சியை எவரேனும் கண்டால், 'லிங்கன் முழுமனத்துடன் கையெழுத்திட வில்லை; அடிமையர் விடுதலையில் அவருக்கே நம்பிக்கை இல்லை” என்று கயிறு திரிக்கவும் கூடும்" என்று சொல்லிக் கொண்டே கையெழுத் திட்டார்.
கையெழுத்தா?
பதின்மூன்று லட்சம் நீக்ரோவர்களின் விடுதலை முழக்கம்! வெற்றிச் சங்கு! 'ஏழையென்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்” என்னும் மந்திரம்! ஆண்டவனே வந்து தந்த அருட்கொடை! பிறப்புரிமைப் பெருஞ்சாசனம்! ஆம்! "விடுதலைப் பிரகடனம்.” 1863 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் கையெழுத்திடப் பட்டது.
அடிமையர் தந்தை
உள்ளத்தை உறுத்தியது எதுவோ, சட்டம் படிக்க வைத்தது எதுவோ, சட்டசபைக்குள் நுழைய வைத்தது எதுவோ, தலைவராக வரச் செய்தது எதுவோ, அகிலம் உள்ளளவும் அசைக்க முடியாத புகழ்ப் பட்டயத்தைத் தந்தது எதுவோ அது நிறைவேற்றப் பட்டுவிட்டது. எத்தனை எத்தனை ஆண்டுகளாக எவரெவர் முயற்சிகளாலும் முடிக்க முடியாச் செயல், வீரர் லிங்கனால் ஒரு நொடியில்நிறைவேற்றப் பட்டுவிட்டது.
லிங்கன் பிறவி நோக்கம் நிறைவுற்றதாக மகிழ்ந்தார். நீக்ரோவரோ பிறப்புரிமை பெற்றதாக ஆர்த்தார். இலட்சக் கணக்கில் நீக்ரோவர் கூடி முரசும் பறையும் முழங்க ஆடலும் பாடலும் நிகழ,
"பிறப்புரிமை தந்த பிதாவே வாழ்க"
“அடிமையர் தந்தையே வாழ்க”
என்று முழக்கமிட்டு நகரெங்கும் கொண்டாடினர்.
"நீக்ரோவர் அனைவருக்கும் விடுதலை தந்துதான் ஐக்கியம் காக்கப்பட வேண்டுமானால் அப்படியே செய்வேன்; விடுதலை தராதுதான் ஐக்கியம் காக்கப்பட வேண்டுமானாலும் அப்படியே செய்வேன்; ஒரு சிலருக்கு விடுதலை தந்தும், ஒருசிலருக்கு விடுதலை