வானவில்
உயிர்க்கடன்
97
'ஒவ்வோர் உயிர்க்கும் தனிஉரிமை உண்டு' என்றால் அவ்வுரிமையை ஒவ்வோர் உயிரும் கொள்ள, ஒவ்வோர் உயிரும் உதவியாக இருத்தல் கடமை.
'எனக்கு உரிமை வேண்டும்' என்று நான் எண்ணும் போதே, பிறர்க்கும் அவ்வுரிமை உண்டு; அதனை அவர் பெற நான் உதவியாக இருத்தல் என் கடமை எனக் கொள்ள வேண்டும் என்பது உறுதியானது.
நான் துய்க்க விரும்பும் உரிமையைப், பிறரும் துய்க்க உரிமைப் பட்டவரே என்னும் உணர்வு உண்டானால் அவர் உரிமையை மதித்துப் போற்ற வேண்டும் அல்லவோ!
அதனை மதித்துப் போற்றாமை தானே எதிரீடுகளும் போர்களும் அழிவுகளும் ஆகின்றன.
'உரிமைப் பிறவி' என்றால் உரிமைப்பிறவி எனமற்றை உயிர்களையும் மதித்துப் போற்றுவதேயாம். அதனைக் கருதாத பிறவி எத்தகு பெருநிலை வாழ்வுடைய தாயினும் மதிப்புக்கு உரியது ஆகாது.
எனக்குத் தெருவில் நடக்க உரிமை உண்டு. அவ்வாறே பிறர்க்கும் தெருவில் நடக்க உரிமை உண்டு.
நான் எதிரில் வருவார் உரிமையை மதித்து ஒதுங்குதல் வேண்டும்; அவரும் எனக்கு ஒதுங்கி வழிதருதல் வேண்டும்.
இருவரும் தத்தம் உரிமையையே தடிப்புற எண்ணி, ஒதுங்கிக் கொள்ளாவிட்டால் முட்டுதல் ஆகும்: மோதுதலும் ஆகும்.
ஒருவரே ஒதுங்க வேண்டும் என்பது தடிப்புச் சான்று. ஒருவரே ஒதுங்கிச் செல்லுதல் என்பது அடிமைச்
சான்று.
ஒருவர்க்கு முன் ஒருவர் ஒதுங்கி விட்டுத் தருதல் உரிமைச் சான்று.
வழிநடைக்கு உரியது, வாழ்வு நடைக்கும்
தெருவழிக்கு உரியது, இல்வாழ்வுத் திருவழிக்கும்
உரியதே.