வள்ளலார் கண்ட சாகாக்கலை
155
படும் கண்ணை மூடிக் கொண்டு தலைவி மணலில் விரலால் போடப்படும் கோடு கூடல் இழைத்தல் எனப்பட்டதும் அறிக.
ஒருவர்க்காக ஒருவர் இன்ப அன்பிலும் துன்பத்துடிப்பிலும் தாம் அவராக அல்லது அதுவாக மாறுதல் கூடுவிட்டுக் கூடு பாய்தலாம். திருமூலர் ஆயன் காட்டிய அன்பை ஆக்களின் மேல் காட்டித் தம் ஆயன் எனவே அவை கொண்டு மகிழுமாறு செய்த செயல் கூடுவிட்டுக் கூடு பாய்தலே என அறிக. திருவள்ளுவர் இதனை,
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
என்கிறார். மேலும்,
அறிவு பெற்ற பயன் ஆருயிர்க்கு வரும் துயரைத் தீர்த்தலே
என்பதை,
‘அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதினோய்
தன்நோய் போல் போற்றாக் கடை’
என்கிறார்.
அன்பின் அடையாளமும், அறிவுப் பேறும் கூடுவிட்டுக் கூடு பாயும் பேரருள் பெருநெறியே என்பதை அறிவால் வள்ளலார், வாழ்வியலை அக்கண்ணோட்டத்துடன் நோக்குதல் வேண்டும். அவ்வுயிர் இவ்வுயிர் என்னாமல் எவ்வுயிரும் தம்முயிராய் வாழ்ந்த பெருமையர் என்பது வெளிப்படை :
‘எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல்
எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவரவர்
உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்என நான்
தேர்ந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தைமிக
விழைந்த தாலோ.'
(5297)
என்னும் தனித் திருவலங்கல் ஒன்றே ஓராயிரம் ஒளிவிளக்கமாய்ப்
புலப்படுத்தும்.