வள்ளலார் கண்ட சாகாக்கலை
183
முதல் ஐந்து திருமுறைகளில் அருணகிரியார், கண்ணப்பர், திருநாளைப் போவார், காழி வள்ளல், காழிக் கவுணியன், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரைப் பாடுகிறார்.
இங்கித மாலையோ பாவன்மை மொழிவன்மை பொருள் காண் திறம் அணிநயம் சொற்றேர்ச்சி என்பவை அனைத்தும் அமைந்தார் தமக்கே பாடவும் பொருள் காணவும் இயலும் பாடல்களைக் கொண்டதாம்.
விண்ணப்பக் கலிவெண்பாவோ தேவாரத் திருத்தல் அடங்கல் முற்றாகக் கற்றார்க்கே பாட இயல்வதாம். நெஞ்சறிவுறுத்தல் முன்னையோர் மொழிபொருளேயன்றி மொழியையும் அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளை மகிழ்ச்சி கொள்ளச் செய்த உத்தியதாம்.
ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை ஆளுடைய அரசுகள் அருள்மாலை ஆளுடைய நம்பிகள் அருள் மாலை
ஆளுடைய அடிகள் அருள் மாலை
ஆகிய நான்குமோ, நால்வராகவும் தாமே கூடுவிட்டுக் கூடு பாய்ந்து துய்த்த துய்ப்பு வெள்ளமாம்!
இவற்றை அறிபவர், இவரை ஓதாதவர் (படியாதவர்) என்பாரா? யாப்பு :
வள்ளலார் பாடிய யாப்பு வகைகள் தாம் எத்தனை? குறள் வெண்பா, குறள் வெண் செந்துறை, குறட்டாழிசை, நேரிசை வெண்பா, வெண்டுறை, நிலைமண்டில ஆசிரியப்பா, ஆசிரியத் துறை, அறுசீர்,எழுசீர், எண்சீர், பன்னிரு சீர், பதினான்குசீர், நாற்பத்தெண்சீர், நூற்றுத் தொண்ணூற்றாறு சீர் விருத்த வகைகள், வண்ண விருத்தம், சந்த விருத்தம், கலிவெண்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, கலித்தாழிசை கலித்துறை, கலிநிலைத் துறை, கலிநிலை வண்ணத்துறை, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், வண்ணக் கலிவிருத்தம், வஞ்சித்துறை, இசைப்பாடல் தாழிசை, இசைப்பாடல் சிந்து (தவத்திரு ஊரனடிகளார் பதிப்பு) என்னும் இருபத்தொன்பது வகை யாப்புக் கோப்பு வள்ளலார் பாடிய வகை என்றால் ஏறத்தாழத், தமிழ் யாப்பை முற்றாக எடுத்துக் காட்டி இசைத்த குயில் அவரல்லரோ!
-