42
சாவாக் கல்வி
இளங்குமரனார் தமிழ்வளம் - 34
"தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று உபதேச மொழியில் வள்ளலார் உரைக்கிறார்.
சாவாத கல்வி என்பது அழியா வாழ்வு பெறும் கல்வியாம். அக்கல்வி இறைவனடி சேரும் கல்வி என்பது வள்ளலார் குறிப்பென அறியலாம்.
வாழ்வின் நீடிப்பு இன்மை, கவலையால் நேர்வது. மனக் கவலை மாற்றும் மருந்து தனக்குவமை இல்லான் தாள்சேர்தல் என்று கூறும் வள்ளுவர்,நீடு வாழ்தலையும் குறிக்கிறார். நீர் வாழ்தலே சாவாத வாழ்வென வள்ளலாரால் கொள்ளப்பட்ட தென்க. அக் குறள்கள்,
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்”
என்பன. இரண்டாம் குறளில் வாலறிவன் நற்றாள் தொழலைக் கல்லார், பிறவற்றைக் கற்றதால் ஆவதென்ன என வள்ளுவர் வினாவுவதை நினைத்தால், இறையடி சேர்தற் கல்வியை அது சுட்டுகிறது என அறியலாம். ஆதலின் சாவாக் கல்வி என்று வள்ளலார் குறிப்பது மெய்ப் பொருட் கல்வியே என்பதும், அதன் நிறைவு 'பேரா இயற்கை' என்பதும் கொள்ளலாம். இஃது,
"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”
என்னும் குறளால் தெளிவாம். இதனை இறுதியில் வரும் சித்திவளாக விளக்கத்துக் காண்க.
அருளாட்சி
அருளாட்சி பொருளாட்சி என்பவற்றை இணைத்து நோக்கும் வள்ளுவர்,