2. செவ்வேள் (முருகன்)
பரிபாடலில், முருகன் செவ்வேள், என்று ஆட்சி பெறுகிறான். அவனுக்கு 'முருகன்' 'சேய்' முதலான பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. சேய் என்பது மிகமிகத் தொல் பெயராகும். தொல்காப்பியத்தில் 'சேயோன்' என மலை நிலக் கடவுள் குறிக்கப் பெறுகின்றான்.
சேய் செம்மை :
"சேயோன் மேய மைவரை யுலகம்" என்றும், அம், மைவரை யுலகம். குறிஞ்சி, என்றும் தொல்காப்பியம் சுட்டுகின்றது.
'மாய்' 'சேய்' என்பவை 'ஓன்' ஈறுபெற்று மாயோன் சேயோன் என வழங்கப்பெறுதல் வெளிப்படை. மா, மாய் என்பவை கருமை நிறத்தையும், சே, சேய் என்பவை செம்மை நிறத்தையும் குறிப்பன. ஆதலால், மாயோன் கருநிறத்தவனாம் திருமாலையும், சேயோன் செந்நிறத்தவனாம் முருகனையும் குறித்தல் விளங்கும்.
சிவந்த அடி 'சேவடி' என ஆகும். முருகன் திருவடியைக் குறிக்கும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து தாமரை புரையும் காமர்சேவடி என்பது எண்ணத்தக்கது. தாமரை இவண் செந்தாமரையாம்.
செங்கதிர்:
முருகன் தோற்றப் பொலிவைச் செங்கதிருடன் ஒப்பிடுவது பெருவழக்கு. காலைக் கதிரவன் நீலக்கடல் மேல் செவ் வண்ணத் துடன் தோன்றும் தோற்றம், மயில்மேல் அமர்ந்த மாணிக்கமாக முருகனாகத் - தோற்றமளித்தது நக்கீரர்க்கு; அதனால்,
“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு’
""
என உவமைப் படுத்தி உவந்துரைத்தார். திருமுருகாற்றுப் படையின் தொடக்க அடிகளே வை என்பது குறிப்பிடத் தக்கது.