திருவருணைக் கலம்பகம்
91
திருமயிலையைச் சார்ந்தவர் சிவநேசர் என்பார். அவர் திருமகளார் பூம்பாவையார். ஞானசம்பந்தருக்கு அவரைத் தர உறுதி கொண்டார் சிவநேசர். இந் நிலையில் பாவையாரைப் பாம்பு தீண்ட இறந்தார்; அவர் உடலை எரித்து என்பை எடுத்துக் குடத்தில் இட்டு வைத்து ஞானசம்பந்தத் திருமயிலைக்கு வந்த காலையில் நிகழ்ந்தன உரைத்து எலும்பு இருந்த பொற்குடத்தை ஏந்தி நின்றார் சிவநேசர். பிள்ளையார் பாவிசைப் பதிகம் பாடிப் பாவையை எழுப்பினார். (20)
21. இளவேனிற் கால இயல்பு
இரங்கல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
வெற்றிமதன் போர்க்காய வம்பிறைக்கும் காலம் வெங்கனலே போற்காய வம்பிறைக்கும் காலம் சற்றுமிரு கரமென்னே சங்கணியாக் காலம்
தலைவர்துறை மறந்தென்னே சங்கணியாக் காலம் கற்றைநெடுஞ் சடைமுடியார் அடியார்மேல் முழுதும் கருணைநாட் டம்புரியும் அருணைநாட் டுறையும் பெற்றவிளந் தென்றல்மறு கிடத்தியங்கும் காலம்
பேதையேன் சிந்தைமறு கிடத்தியங்கும் காலம்.
(பொ-ரை.) வெற்றிகொள்ளும் மன்மதன் போர்க்கு ஏற்ற அம்புகளை ஏவும்காலம்; வெவ்விய தீயேபோல வெதுப்ப அழகிய நிலா ஒளிவீசும் காலம்; இருகைகளும் ஏனோ சிறிதும் வளையல் பூணாத காலம்; தலைவர் தாம் கூடும் இடம்மறந்து என் அன்பைக் கருதாத காலம்; திரண்டு நீண்ட சடை முடியுடைய சிவனார் தம் அடியார்களின்மேல் பேரருள் நோக்கம் செய்யும் அண்ணாமலை நாட்டில் தங்கிய இளந்தென்றல் காற்று வீதியில் உலாக்கொள்ளும் காலம்; இம் மாலைக் காலம், சூழ்ச்சித்திறம் அறியாத யான் மனம் மயங்கிக் கலங்கும் காலமுமாம்.
(வி-ரை.) இப் பாடலில் மடக்கணி அமைந்துள்ளது. அம்பிறைக்கும் காலம் என்பதை அம்பு இறைக்கும் காலம் என்றும், அம்பிறைக்கும் காலம் என்றும், 'என்னே சங்கணியாக் காலம்' என்பதை 'என்னே சங்கு அணியாக்காலம்' என்றும் என் நேசம் கணியாக் காலம்' என்றும், 'மறுகிடத்தியங்கும்' என்பதை 'மறுகு இடத்து இயங்கும்' என்றும் 'மறுகிடத்