120
இளங்குமரனார் தமிழ்வளம் -38
(பொ-ரை) புன்னை மலர் அணிந்த அழகிய கரிய கூந்தலையும் அன்னம் போன்ற மெல்லிய நடையையும் உடைய தோழியே, காலை மாலை ஆகிய இரு பொழுதுகளிலும் கைகளாகிய மலர்களைக் கூப்பித் திருமாலும் நான்முகனும் வணங்குதற்கு அருமையானவனும், இமைப் பொழுதளவுக்குள்ளே உலகம் எல்லாவற்றையும் படைத்தவனும், தனக்கு ஒரு தாயும் தந்தையும் இல்லாதவனும், பழவினையாகிய கயிற்றால் பல்வேறு உயிர்களாகிய பாவைகள் அழகாக நடிக்குமாறு திருக்கூத்துச் செய்கின்றவனும், வினைகளாகிய வலைகளை அறுக்கின்ற மெய்யான தவவேடத்தை யுடையவனும், மனத் துண்டாம்
டரை
அகற்றும் மான்மதநாதன் என்னும் பெயருடையவனும், திருவருட் பேறாகிய அறுபத்தாறு ஆயிரம் பொன்னை மறுக்காமல் வழங்குகிறவனும், வசந்தவிநோதன், அண்ணாமலையன், அதிருங் கழலன், கண்ணார் அமுதன் என்னும் திருப்பெயர்களை யுடைய வனுமாகிய சிவபெருமானது திருக்கைலாயமலையில் காமனாகிய வீரனுக்கு இளவேனில் காலமாகிய கொல்லன் இயமனது தென்திசையில் பொதியமலை என வைக்கப் பெற்ற துருத்தியால் தென்றற்காற்றை ஊதி, சோலையாகிய உலையில் தளிராகிய தீ, கொழுந்துவிட்டு எரிய, குறைவில்லாத குயிலின் வாயாகிய குறட்டினில் அடக்கி, புள்ளிகள் விளங்கும் வண்டுகளாகிய கரிகளை அவ்வுலையிடைச் சொரிந்து, உள்ளே பொருத்தப் பெற்ற பூங்கொத்தாகிய சூட்டுக்கோலால் துளாவி, தண்ணிய மலர்களாகிய அம்புகளைச் செய்து கொடுத்தனன்; இவ்வாறாகவும் தலைவர் இன்னும் வந்திலரே.
(வி-ரை) இளவேனில் பருவங் கண்டு வருந்திய தலைவி தோழிக்கு உரைத்தது இது.
முதற் பத்து அடிகளில் இறைவன் ஐந்தொழில்களையும் இனிதின் அமைத்தார். 'யாவையும் படைத்தோன்' என்பதால் படைப்பும், 'திருநடம் புரிவோன்' என்பதால் காப்பும், 'வினை வலை அறுக்கும்' என்பதால் அழிப்பும், 'மன அலைப் பிணிக்கும்' என்பதால் மறைத்தலும், 'தியாகன்' என்பதால் அளித்தலும் வெளிப்படுத்தார்.
'மறலித்திசையின்' என்பது முதல் 'நீட்டினன்' என்பது முடிய உருவகம். பொதியமலை துருத்தியாகவும், சோலை உலைக்களமாகவும், தளிர் தீநாவாகவும், குயில்வாய் குறடாகவும், வண்டு உலைக்கரியாகவும், பூங்கொத்து சூட்டுக்கோலாகவும், வசந்தகாலம் கொல்லனாகவும், மலர் அம்பாகவும் உருவகம் செய்யப்பெற்றன.