224
இளங்குமரனார் தமிழ்வளம்-38
அன்னமாகப் பறந்த நான்முகனால் காணல் அரிது; அன்னம் சோறு ; அன்னம் போல்வாள்.
60. பரி நரியாக்கியது
(இறைவனால் பரியான நரிகள் அன்றை இரவில், மீட்டும் காட்டு நரிகளாகச் சென்றதைக் கூறுவது)
விரித்தபுகழ் ஆலவாய் மேவுசுந்த ரேசர்பெரும்
பரித்திரளைத் தாநரியாப் பண்டுசெய்தார் அம்மானை;
பரித்திரளைத் தாநரியாப் பண்டுசெய்தார் ஆமாகில் மரித்தலிலா வாசியையேன் மாய்வித்தார் அம்மானை;
மாயத்தான் யாவும் வகுத்தனர்காண் அம்மானை.
(பொ-ரை) பரவிய புகழுடைய திருவாலவாயில் கோயில் கொண்ட சொக்கர், குதிரைக் கூட்டத்தைத் தாவும் நரிகளாக முன்னாளில் செய்தார் அம்மானை; குதிரைக் கூட்டத்தைத் தாவும் நரிகளாகச் செய்தாரெனில், சாதல் இல்லாத மற்றைக் குதிரைகளையும் ஏன் சாகச்செய்தார் அம்மானை; அவர் சாகச்செய்தனரோ, அல்லர்; அவற்றை எல்லாம் இறந்தனவாக மாயமாகச் செய்து காட்டினார் அம்மானை.
(வி-ரை) தாநரி - தாவும் நரி; தாம்நரி ; தாநரி; இறைவர் தாம் நரியாகச் செய்தார் என்றுமாம். மரித்தலிலா வாசி (குதிரை) - பாண்டியன் குதிரைக் கொட்டடியில் இருந்த மற்றைக் குதிரைகள்.
மாயத்தான் யாவும் வகுத்தனர். மாயத்தினாலே எல்லாம் செய்து காட்டினார்; மாயத் தான் யாவும் வகுத்தனர் - இறப்பதற்காகவே எல்லாவற்றையும் படைத்தனர்; வகுத்தான் வகுத்த வகை அது; பிறந்தனயாவும் இறக்கும் ஆதலின் இவ்வாறு கூறினார்.
61. மண் சுமந்தது
(மாணிக்கவாசகரை வையையாற்றில் சுடுமணலில் கிடத்தி வருத்த, இறைவன் வயையைப் பெருகுவித்தான்; மதுரையில் இருந்த 'வந்தி' என்பாளுக்கு ஆளில்லையாக இறைவனே பிட்டுக்குக் கூலியாளாக வந்து மண் சுமந்தான்.)
தண்சுமந்த வையைதனில் சார்ந்துமது ரேசனன்னீர்ப் பெண்சுமந்தோன் மண்சுமந்தான் பிட்டுக்காய் அம்மானை;