உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஒரு நாடகம்

அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் இளைஞர் ஒருவர். அவர் பெயர் கரம் சந்திரர். அரிச்சந்திரன் எத்தனை எத்தனை இன்னல்கள் அடைந்தும் பொய்யே சொல்லாது வாழ்ந்த உயர்வு, இளைஞர் உள்ளத்தைத் தொட்டு நன்றாகப் பதிந்தது. "இன்று முதல் நான் பொய் சொல்லவே மாட்டேன்" என்று உறுதி செய்துகொண்டார். நாடகம் படக்காட்சி இவற்றைக் கண்டு எத்துணைப் பேர்கள் இப்படி உறுதி செய்து கொண்டு இறுதி வரை காப்பாற்றுவார்கள்?

கரம்சந்திரர் சிறுவராக இருக்கும்போது கெட்டவன் ஒருவனது உறவு ஏற்பட்டது. அவன் வலைக்குள் நன்றாக மாட்டிக் கொண்ட கரம்சந்திரர், யாருக்கும் தெரியாமல் மறைவான இடங்களில் புலால் உண்டார். வீட்டுக்குப் போய் வழக்கம்போல் சாப்பிட முடியாது அல்லவா! அதனால் “வயிற்றுக்கு நன்றாக ல்லை; பசிக்கவில்லை" இப்படியெல்லாம் காரணம் - பொய்க் காரணம் - காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் சொல்லி முடித்தவுடன் மனச்சாட்சி - அரிச்சந்திரன் கதை ஆகிய இரண்டும் கூடிச் சேர்ந்து "பெற்று வளர்த்துப் பேரன்புடையராய் இருக்கும் தாயினிடமா பொய் சொல்லுவது?" என்று வாட்டும்! 'எத்தனை நாள்களுக்குத்தான் உன் பொய் வெளிப்படாமல் இருக்கும்?' என்று இடித்துக் காட்டும். ஆம்! கரம்சந்திரர் மேலும் உறுதி செய்து கொண்டார்; "புலால் உண்பதும் புகை குடிப்பதும் ஆகிய தீய வழக்கங்கள் செலவினை உண்டாக்கிப் பொய்யும் பேசவைக்கின்றன. ஆதலால் இவற்றை இன்று முதல் தொடேன்."

இளைஞர் கரம்சந்திரர் ஒரு தொடக்கப் பள்ளியிலே படித்து வந்தார். அப்பள்ளியை மேற்பார்வையிடுவதற்காக அதிகாரி வந்திருந்தார். அவர் சில ஆங்கிலச் சொற்களைச் சொல்லி மாணவர்களை எழுதச் செய்தார். அவர் சொல்லிய ஆங்கிலச் சொற்களிலே கெட்டில் (kettle) என்பதும் ஒன்று. இச்சொல்லைக் கரம்சந்திரர் சரியாக எழுதவில்லை. அவர் சரியாக எழுதவில்லை என்பதை ஆசிரியர் பார்த்தார்.