26.
கொண்டவன் மேலே கொண்டனள் சீற்றம்
சீற்றம் பெருகிப் பெருகி வளர்ந்தது.
சீரிய வேளை பார்த்து நின்றாள்.
கடிய உழைப்பும் கொடிய பசியும் கலந்து கொள்ளக், களைப்புடன் வந்தான் கணவன்.
கால் கை கழுவி, வைத்த உணவை, வயிறார உண்டான். உண்ட மயக்கம், உடனே சாய ஏவிற்று.
உறக்கம், உறக்கம் குறட்டை உறக்கம்!
உரிய பொழுது ஈதென உணர்ந்தாள்,
உள்ளே எரிந்து கொண்டிருந்த மனைவி;
எடுத்தாள் மண்ணெண்ணெய்;
எடுத்தாள் தீப்பெட்டி;
கணவன் மேலே பன்னீராகப் பரவத் தெளித்தாள்;
குச்சியைக் கொழுத்திக் குறட்டைக்கூடே வைத்தாள்; பற்றிய தீ சுற்றி எரித்தது!
எரிந்தவன் முழுதாய்க் கரியுமுன்னே, எழுந்து விட்டான்! கரியாதெழுந்த கணவனைக் கண்டு, உள்ளே கரிந்து போனாள் மனைவி!
மருத்துவமனையில் சேர்ந்த கணவன் மனையாள் செய்த செய்கையைப் பொறுத்துக்கொண்டு, மறைத்தே போட்டான்!
"சமையல் செய்தேன்; எழுந்த தீயால் எண்ணெய் எரிந்து என்னையும் எரித்து இந்நிலை செய்தது" என்றான்.
குற்றம் செய்தாள் இவளெனக் குணத்தால் காட்டிக் கொடாத கணவன், குணத்தை நினைத்து உருகினாள்!