210
இளங்குமரனார் தமிழ்வளம் - 39
இருக்கும்; இருந்து வரும் தடையேயாம். அதனைக் கண்டு கொண்டு நெறிப்படி வாழ்வீரேயானால் நீர் விரும்புவதற்கு மேலாகவும் நெடிய இனிய வாழ்வு கொள்ளலாம் என்கிறார். அதற்கு மூலவழி ஒன்றை முதற்கண் வைக்கிறார்.
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்"
என்பது அது (6)
"மெய் வாய் கண் மூக்கு செவி" என்பவை ஐம்பொறிகள்; அவற்றின் வழியாகத் தொடுதல், சுவைத்தல், காணல், முகர்தல், கேட்டல் என்பவை உண்டாகின்றன. இவற்றைப் பக்குவப்படுத்தி வாழும் மெய்யுணர்வாளர் வழியில் நடப்பவர் நெடிய வாழ்வுறுவர்" என்பது இப்பாடற் பொருளாகும்.
அவித்தல் என்பது அழித்தல் அன்று; அவித்தல் ‘பக்குவப் படுத்துதல்' என்னும் பொருளது. பச்சையாகத் தின்ன ஆகாத காய்கறி கீரை கிழங்கு ஆகியவற்றை அவித்துப் பக்குவப் படுத்திப் பயன் கொள்வது போன்றது இது. இவ்வாறு பக்குவப் படுத்தும் மெய்யுணர்வாளரால் உலக ஒழுக்கமே உள்ளது என்பதை,
"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகையறியான் கட்டே உலக”
என்று வள்ளுவர் கூறுவார்.
(27)
ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலங்கள் உண்டாகின்றன. ஐம்புலங்களின் வழியாக உண்டாகும் அறிவுகள் ஐவகை அறிவுகள். இவ்வகை அறிவையும் மேலாண்மை செய்யும் மன அறிவாம் ஆறாம் அறிவு அல்லது பகுத்தறிவும் மாந்தருக்கு உள்ளது. அப்பகுத்தறிவு உடையவர் தம் பிறப்புச் சிறப்பை உணர்ந்து கொள்வார் என்றால் மாந்த நிலையில் இருந்து கீழிறங்க மாட்டார். "இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்பதற்கு இலக்கணமாகப் போட்டி போட்டுக் கொண்டு விலங்கு பறவை புழு பூச்சியென இழிந்த பிறவியாக நிற்க மாட்டார்.
உணவும் நோயும்
புலி புல்லைத் தின்பதில்லை; புல்வாய் எனப்படும் மான் புல்லைத் தின்பதில்லை. அவ்விலங்குகள் தாமும் தத்தமக்கு