உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கல்யானை

வான் வறண்டாலும் தான் வறளாத நீர் வளம் உடையது காவிரி. சோலைகளைப் பெருக்கிச் செல்வதால் காவிரி என்றும், தேனொழுகும் சோலைகளை மிகக் கொண்டுள்ள படியால் காவேரி என்றும் (வேரி தேன்) பெயர் பெற்ற பெருமை காவிரிக்கு உண்டு.

=

ஆற்றுப் பெருக்கால், வரப்பு உயர்வதும், வரப்பு உயர்வதால் நீருயர்வதும் நீருயர்வதால் நெல்லுயர்வதும், நெல்லுயர்வதால் குடி உயர்வதும், குடி உயர்வதால் கோல் உயர்வதும் இயற்கை அல்லவா!

சோழ நாட்டின் வளங் கண்டு, அதனை அண்டை நாட்டினரும், அயல் நாட்டினரும் பன்முறை கைப்பற்ற எண்ணியது உண்டு! படை கொண்டு வந்ததும் உண்டு! ஆற்றாமல் தோற்று ஓடியதும் உண்டு: ஆட்சி நிலைக்க விட்டதும் உண்டு!

வேற்றவர்களை அல்லாமல் வேந்தர் பரம்பரை யினருள்ளும் "யான் ஆள வேண்டும்: அவன் என்ன ஆய்வது? என்னளவு அவனுக்கு உரிமை உண்டா? உரம் உண்டா? உயர்வு உண்டா?" என்று கிளர்ந்து எழுயந்தவர்களும் கேடு சூழ்ந்தவர் களும் பலர் பலர்.

இத்தகைய பிணக்குமிக்க ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த ஆண்மையால் பிறரை அடக்கி வைத்திருந்த வேந்தன் 'திடுமென' இறந்து விட்டான் என்றால், அவன் இறப்பை எப்பொழுது எப்பொழுது என்று உற்றார் உறவினர் எதிர் நோக்கியிருந்து ஆட்சியைக் கவர்ந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றால், இவ்வேளையிலே பச்சிளம் குழந்தையொன்று பாராளும் உரிமையில் இருக்கிறது என்றால், அதன் நிலைமையாதாகும்?

எங்கு நோக்கினும் பகைமை; எங்கு நோக்கினும் எதிர்ப்பு; எங்கு நோக்கினும் தீமை; ஏச்சு - பேச்சு; ஆனாலும் இளைஞன் ஊக்கம் இழந்துவிடவில்லை; ஒரே ஒருவராகத் துணை நின்ற மாமனும் கைவிடவில்லை!