1. பெண்ணிற் பெருந்தக்க யாவுள?
பெல்சியத்தின் தலைநகர் புரூக்சேல்!
அது பகைவர் முற்றுகைக்கு ஆட்பட்டது.
வலிய முற்றுகை!
வன் கொடுமைத் தாக்குதல்!
நகரமே முழுமையாகக் கோட்டை கொத்தளங்களுடன் பற்றிக் கொள்ளப்பட்டது.
ஒருவரும் வெளியேறிச் செல்ல இயலா நிலை! முற்றுகைப்பட்டு முற்றாக ஒழிந்து போகும் நிலை.
படைத்தலைவன் நினைத்தான்.
பரிவொடும் நினைத்தான்.
"போரழிவில் போரின் பொருளும் அறியா மழலையரும் இளையரும் இறந்துபடவேண்டுமா?
போரில் பங்கிலா மகளிர்தாமும் இறந்துபட வேண்டுமா? வேண்டா! வேண்டா!"
என்று நினைத்தான்.
"குழந்தையர் இளையர் மகளிர் ஆகியோர் கோட்டையை விட்டு வெளியே செல்லலாம். வேண்டும் இடம் செல்லலாம்;
செல்லும்போது அவர்கள் விரும்பும் பொருளைத் தாமே எடுத்துச் செல்லும் அளவு எடுத்தும் செல்லலாம்." என்றான்.
மகளிர் கூடி எண்ணினர்!
முடியும்-உயிருக்கு
மாநாடு கூட்டியா பேச முடியும் - உயிருக்கு மன்றாடும் போதில்!
மனத்தொடு மனமாய்ப் பேசினர்.
ஒவ்வொரு பெண்ணும் தலையிலோ முதுகிலோ ஒரு பொருளைச் சுமந்து கொண்டு சென்றாள்.