16. வினை
பழந்தமிழ் நூல்களில் 'ஊழ்' என்னும் சொல்லாட்சி உண்டு என்றும், ஊழ்வினை என்னும் சொல்லாட்சி இல்லை என்றும் கண்டோம்.
அறத்துப்பால் முடிவில் - பொருட்பால் தொடக்கத்திற்கு முன் ஊழ் வைத்த திருவள்ளுவர், அவ்வதிகாரப் பத்துப் பாடல்களுள் ஒன்றிலேனும் 'வினை' என்னும் சொல்லை வைத்தார் அல்லர் என்பது நோக்கத்தகும்.
இனி, வினை என்னும் சொல்லமையத் தீவினையச்சம் (21) தெரிந்து வினையாடல் (52) ஆள்வினையுடைமை (62) வினைத் திட்பம் (67) வினைத் தூய்மை (64) வினை செயல் வகை (68) என ஆறு அதிகாரங்களை வகுத்தார்.
வினை செயல் வகை (68) என்பது போலத் தெரிந்து செயல் வகை (47) குடி செயல் வகை (103) பொருள் செயல் வகை (76) என்றும், வெருவந்த செய்யாமை (57) என்றும் வகுத்தார்.
இவற்றிலும் பிறவற்றிலுமாக 60 குறள்களில் 'வினை என்னும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது.
ஒரு குறளில் (612) மும்முறையும், ஆறு குறள்களில் (201, 321, 367, 519, 677, 678) இரு முறையும், மற்றைக் குறள்களில் ஒரு முறையும், ஆக அறுபத்தெட்டு முறை, வினை என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.
இவற்றுள் 'செயல் என்னும் ஒரு பொருளையன்றி, வேறு பொருளில் இடம் பெறவில்லை என்க
>
தீய செயல் செய்தற்கு அஞ்சல் வேண்டும் என்னும் ‘தீவினை: யச்சத்தில் வரும்,'
"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு"
(201)