14
இளங்குமரனார் தமிழ்வளம்
-
40
பொழுது போக்கும் புன்மக்களையோ, “தம் பொருள்" என்றாராம்
வள்ளுவர்?
இவ்வகை ஐயம் எவர்க்கும் உண்டாதல் கூடாது என்றே “அறிவறிந்த மக்கள்” என்றார்.
“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற” என்பது அது.
அறிவறிந்த மக்களெல்லாம் மக்கள் தாமா? என வள்ளுவ வழியர் ஐயுறார். அவர் கூறும் அறிவின் இலக்கணம் தனிப் பெருஞ் சிறப்பினது. பிறவுயிர்களுக்கு உண்டாம் துன்பத்தைத் தன் துன்பமெனக் கருதாதவன் அறிவுடையன் அல்லன் என்பதே வள்ளுவத் தெளிவு. ஆதலால், உலக நலத்திற்குப் பயன்படா அறிவு அறிவன்று; அஃது அழிவறிவு என்பதாம்.
மக்கட் பேற்றில் இதனை வெளிப்படக் குறிக்குமாறே "பழி பிறங்காப் பண்புடை மக்கள்” என்றார். அறிவறிந்த பழிபிறங்காப் பண்புடை மக்களே தம் பொருளாம் மக்கள் என உறுதிப் படுத்தலாம். அவர்களே சான்றோர் பாராட்டும் சான்றோர் என்பதும் தேர்ந்த முடிவு.
இத்தகு நன்மக்களால், அம்மக்களின் தாய் தந்தையர் அடையும் இன்பம் பெரிதே! மிகப் பெரிதே! "இவனைப் பெற்ற வயிறுடையாள் என்ன பேறு பெற்றாளோ” என்னும் பேற்றினும் பெற்ற வயிற்றுக்குப் பெருமை சேர்க்கும் பேறு ஒன்று உண்டோ? உண்டோ?
"இவளைத் தந்தவனே தந்தை என்னும் தகவுக்கு முழுதுறும் உரிமையாளன்” என்பதனினும் தந்தைக்குப் பேறு ஒன்று உண்டோ? உண்டோ? ஆனால் மக்களால் பெற்றோர் உடையும் மகிழ்ச்சி மட்டுமா பிறவிப் பேறு? இல்லையே!
நன்மகப் பேற்றால் பெற்றோர் அடையும் இன்பத்தினும் பேரின்பம் அடைவது உலகத்து உயிர்கள் எல்லாமுமேயாம் என்கிறார் திருவள்ளுவர்.
“தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது'
என்பது அது.
""
நன்மக்களைப் பெறுதலால் அம்மக்களைப் பெற்ற பெற்றோரினும் உலகமா இன்பம் பெறுகின்றது?