3. திருக்குறளில் தொழில் உறவு
உறுதல் (அடைதல், பொருந்துதல்) என்பதன் வழியாக வந்த சொல் உறவு ஆகும். தொழில் உறவு மிக விரிவுடையதாகும்.
கல்வி நிலை, தொழிற் பயிற்சி நிலை, தொழில்நிலை, தொழில் மேலாண்மை நிலை, தொழிற் பயிற்று நிலை என்னும் ஐவகையில் தொழில் உறவு அமையும்.
மேலும் நிறுவன மேலாண்மைநிலை, அலுவல்நிலை, வாடிக்கையாளர் நிலை, வாணிகர் நிலை, பொதுமக்கள் நிலை என ஐவகை உறவாகவும் விரியும்.
இவ்வுறவுகள் யாவும் இனியவையாய் இயன்றால் அத் தொழிலகம் இன்ப நிலைக்களம் ஆகிவிடும். இவற்றுள் ஓர் ஒன்று குறைபடினும் அவ்வளவால் துன்பமும் சிக்கலும் அமையவும் வளரவும் நேரும். உறவுக்கேடு ஒள்றிரண்டாய் விரியின் தொழில் முற்றாகக் கெடவும் வழியாம். ஆதலால், இப்பகுதிகளுள் எதுவும் விலக்கப் பெறாமல் போற்றப்பட்டு வருதல் தொழிற் சீர்மையாம்.
அன்பு என்பது ஓர் உயர்பண்பு. உள்ளத்தளவில் அமைந்த அன்பு உலகாக விரியும் பெருமையது. அது சேர்ந்த இடத்தையும் சேர்ந்தவரையும் பிரிவறியாப் பெருநிலைக்கு ஆளாக்குவது. அதனால் அன்பின் வழியது உயிர்நிலை என்றார் திருவள்ளுவர். அவ் அன்பர் இயல்பை" என்பும் உரியர் பிறர்க்கு" என்றும் உரைத்தார். அவ் அன்பே ஆர்வத்தைத் தரும் எனவும் அதுவே அகலா நட்பை-உறவை-ஆக்கும் எனவும் அவர் உரைத்தார்.
66
‘அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு”
என்பது அது.
அன்பு உடையவர் ஒத்தது அறிவார். ஒத்தது அறிதல் என்பது தமக்கு ஒத்தது எதுவோ அதுவே பிறர்க்கும் ஒத்தது என உணர்ந்தும், சொல்லியும், செய்தும் ஒருவரோடு ஒருவராய் வாழும் நிலை ஆகும்.