40
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
“ஆமாண்டா. பொம்பளெயே கொன்னுபூட்ட ஆம்பளேடா இவன்! ஆம்பளேயாம் ஆம்பளே! மீசையெ பாரு!” என்று பேசினான் மற்றவன்.
“என்னடா சொன்னே. இதோ பார் உன்னை கொன்னுடறேன்,'” என்று சினத்தோடு எழுந்து பாய்ந்தான்; வெறி மயக்கத்தில் விழுந்தான்.
இந்தச் சமயத்திலே நாலைந்து ஆட்கள் அவர்களை அணுகி, அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் சாதாரண ஆட்களைப் போலக் காணப்பட்ட போதிலும், உண்மையில் அரசாங்கச் சேவகர்கள். சுந்தரியின் கொலையைப் பற்றிப் புலன் அறிந்து, உண்மைக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சேவகர்கள். குடிகாரர்கள், அடுத்த நாள் நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டனர். நீதிமன்ற உசாவலில், சுந்தரியைக் குத்திக் கொன்றவன் அந்தக் குடிகாரன் என்றும், மற்றக் குடிகாரன் அவனுக்கு உதவியாக இருந்தவன் என்றும் தெரிந்தது.
“சுந்தரியை ஏன் கொலை செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு, யாரும் எதிர்பாராத விடை வந்தது. புத்த சமயத்தாருக்கு மாறாக இருக்கிற வேறு சமயத் துறவிகள் சிலர், தங்களுக்குக் காசு கொடுத்து, சுந்தரியைக் கொன்று, புத்த துறவிகள் தங்கியிருக்கும் சேதவனத்துக் குப்பை மேட்டில் போட்டு விடும்படி சொன்னார்கள் என்றும், பெருந்தொகை கொடுத்தபடியால், அதற்குத் தாங்கள் உடன்பட்டு அவளைக் கொன்று விட்டதாகவும் சொன்னார்கள்.. இந்தச் செய்தி பெரிய பரபரப்பை உண்டாக்கி விட்டது.