உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

குடியானவன்‌ அன்று காலையில்‌ நடந்ததைக்‌ கூறினான்‌. தான்‌ விடியற்காலையில்‌ வயலுக்குச்‌ சென்று உழுது கொண்டிருந்ததையும்‌, அப்போது புத்தர்‌ பெருமான்‌ ஆனந்த தேரருடன்‌ அங்கு எழுந்தருளி வந்ததையும்‌, அவர்கள்‌ அங்கிருந்த பணப்பையைக்‌ கண்டு பேசிக்‌ கொண்டவற்றையும்‌ விளக்கமாகக்‌ கூறினான்‌. கூறி, “அவர்கள்‌ பண மூட்டையை நச்சுப்‌ பாம்பு என்று சொன்னது என்னைப்‌ பொறுத்த வரையில்,‌ உண்மையாய்‌ விட்டது. நான்‌ பணத்தைக்‌ களவு செய்யாதவனாக இருந்தும்,‌ இந்தப்‌ பணம்‌ என் உயிருக்கு நஞ்சாக இருக்கிறது,” என்று சொன்னான்‌. இதைக்‌ கேட்ட அரசர்‌, தமக்குள்‌ எண்ணினார்‌. “இந்த ஆள்‌, உலகத்துக்கே பெரியவர்களாக உள்ளவர்களைச்‌ சான்று கூறுகிறான்‌. இவனைப்‌ பிடித்து வந்த சேவகர்‌ கூறிய சான்றுகளோ, இவன்‌ கள்வன்‌ என்பதைத்‌ தெரிவிக்கின்றன. ஒரு வேளை. இவன் மீது தவறாகக்‌ குற்றம்‌ சாற்றப்பட்டிருக்குமோ? இதைத்‌ தீர உசாவ வேண்டும்‌.” என்று எண்ணிய அரசர்‌, குடியானவனைக்‌ கொலை செய்யாமல்,‌ சிறையில்‌ வைக்‌கும்படி கட்டளை இட்டார்‌.

அன்று மாலை அரசர்‌, புத்தர்‌ பெருமான்‌ எழுந்தருளியிருந்த சோலைக்குச்‌ சென்று, அவரை வணங்கி, “பெருமானே! இன்று காலையில்‌ தாங்கள்‌ ஒரு குடியானவன்‌ உழுது கொண்டிருந்த வயலுக்கு எழுந்தருளினீர்களோ,” என்று கேட்டார்‌.

“ஆமாம்‌, அரசரே!”

“அங்குத்‌ தாங்கள்‌ என்ன கண்டருளினீர்கள்?”