பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கணை நோய்

கணிதத்தின் சுருங்கிய வடிவம் எனக்கூறலாம்.

கணிதவியலின் மற்றொரு பிரிவான வடிவ கணிதம் கோணங்கள், பக்கங்களை அளக்க உதவுகிறது. முக்கோணம், சதுரம், செவ்வகம், நாற்கரம், வட்டம் முதலிய வடிவங்களின் பரப்பளவுகளைக் கணக்கிட்டறிய இக்கணித முறை பயன்படுகிறது. வடிவ கணிதவியலைச் சிறப்பாக வளர்த்த பெருமை எகிப்தியர்களைச் சேர்ந்ததாகும். வடிவ கணித தோற்றத்தின் மூலவராக விளங்குபவர் யூக்ளிடு எனும் கிரேக்கர் ஆவார்.

திரிகோணமிதி எனும் கணிதமுறை உயர்ந்து நிற்கும் பொருட்களின் உயரங்களை அளந்தறிய பயன்படுகிறது. வானவியல் துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இக்கணிதவியல் முறை அமைந்துள்ளது.

ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற பண்டைக் கால கணிதவியல் வல்லுநர்களைப் போன்ற திறம்பட்ட கணிதவியல் மேதையாக அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்தவர் இராமானுஜம் ஆவார்.

கணிப்பொறி : மின்னாற்றலால் இயங்கும் கணிப்பொறி இன்றைய வாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது எனலாம். நாம் பலமணி நேரம் செய்யவேண்டிய பணிகளை, கணிப்புகளை ஒருசில நொடிகளுக்குள்ளாகவே கணிப்பொறி கணித்துத் தந்துவிடுகிறது.

தொடக்கக் காலத்தில் கணக்குப் பொறியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கணிப் பொறிகள் (Camputers) மிகப் பெரியதாக உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று கையடக்கமாக

கணிப்பொறி

சிறு வானொலிப் பெட்டி வடிவில் கிடைக்கின்றன. நாம் தரும் தகவல்களைச் சேமித்தும் தேவைப்படும்போது அவற்றைத் தேவைக் கேற்பக் கணித்தும் தந்துதவுகின்றன.

இன்று கணிப்பொறிகள் மருத்துவத் துறையிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன. மிக நுண்மை வாய்ந்த அறுவை சிகிச்சைகளை கணிப்பொறி உதவியுடன் செய்ய முடிகிறது. எழுத்துக்களை எழிலுடன் அச்சுக்கோக்க இப்பொறி பயன்படுகிறது. கணிப்பொறிகளின் உதவியோடு செயற்கை மனிதனை உருவாக்கி இயக்க முடிகிறது. மனிதன் செய்ய வேண்டிய பணிகளை அவனைவிட விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய கணிப்பொறிகளால் முடிகிறது என்பது வியப்பூட்டும் செய்தியாகும்.

கணை நோய் : இந்நோயை ஆங்கிலத்தில் ‘ரிக்கெட்ஸ்' என்று அழைப்பார்கள். இது ஒரு குழந்தை நோயாகும். ஆறு மாதத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் உள்ள குழந்தைகளையே இந்நோய் பெரிதும் பீடிக்கிறது. தேவையான அளவு உடலில் வைட்டமின் D சத்து இல்லையெனில் இந்நோய் உண்டாகும். இந்நோய் கண்ட குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது. இதனால் குருத்து எலும்பு வலுவான எலும்பாக மாற இயலாமற் போகிறது. எனவே, உடல் எலும்புகள் கோணல் மாணலாக வளைய நேரிடுகிறது. வலுக் குன்றிய குருத்தெலும்பு வளைந்த நிலையிலேயே பருத்து விடுவதால் உடல் அமைப்பு விகாரமாகிவிடுகிறது.

இந்நோய் கண்ட குழந்தையின் தசைகள் தளர்வடைந்திருக்கும். இரவில் தலையில் நிறைய வியர்க்கும், அடிக்கடி பேதியும் இருமலும் இருக்கும். கல்லீரலும் மண்ணிரலும் பெருத்துவிடும். வயிறு ஊதிய நிலையில் பானை போன்றிருக்கும். இதனால் குழந்தை யால் நடக்க இயலாமல் போக நேர்கின்றது.

இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தையின் இரத்தத்தில் கால்சியமும் பாஸ்வரமும் குறைந்து விடுகிறது. இதனால் குருத்தெலும்பு வலுவடைய முடிவதில்லை. எனவே, கணை நோயால் பாதிக்கப்படும் குழந்தைக்கு கால்சியமும் பாஸ்வரமும் நிறைந்த சத்துணவு கொடுக்கப்படவேண்டும். வைட்டமின் 'டீ' உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி அதிக அளவில் குழந்தையின் உடலில் படுமாறு பார்த்துக் கொள்வது நல்லது.