232
இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
என் தாய் முகத்தைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. கோபத்தில் வரம்பு மீறி மிகவுங் கடுமையாகப் பேசி விட்டாள் என்று, நான் அப்போது நினைத்தேன். அவ்வார்த்தைகளின் வேகம் என் மனதில் ஊடுருவிப் பாய்ந்து, சுருக்கென்று தைத்தது. எனவே, நான் என் தாயின் பின்பக்கம் போய், அவள் தோளைப் பற்றிய வண்ணம் சாந்தப்படுத்த முயன்றேன். என் சிற்றப்பா அதற்கு மேல் ஒன்றும் பேசாமல், தலையைக் குனிந்து கொண்டு போய் விட்டார்.
எங்களது பரிதாபகரமான நிலையைக் கண்ட என் தந்தையின் ஆப்த நண்பர்களில் ஒருவரான துவிபாஷி ஜனார்த்தனம் நாயுடுவும், அவரது குடும்பத்தாரும் எங்களைத் தங்கள் ஆதரவில் வந்திருக்குமாறு முதலில் கூறினர். ஆனால், என் தாய் அதற்கு இசையவில்லை. ஆகவே, அவர்கள் திருவல்லிக்கேணியில் காலியாய் இருக்கும் தங்கள் வீடொன்றில் வந்து வசிக்குமாறு மிகவும் வற்புறுத்தி வேண்டிக் கொண்டனர். இவ்வளவு தூரம் அவர்கள் பரிந்து கூப்பிடும் போது, பிடிவாதமாக மறுப்பது நன்றாயிராது என்று உட்கொண்டு, என் தாய் ஒருவாறு இணங்கினாள்.
பதினான்காவது அதிகாரம்
கர்ப்பக் குறியறிந்த தாய் மரணம்
திருவல்லிக்கேணியிலுள்ள வீட்டில் நாங்கள் குடி புகுந்து ஒரு வாரமாயிற்று. என் சிற்றப்பா எங்களுக்கான வசதிகளைக் கூடுமான வரை செய்து கொண்டிருந்தார். எனக்கு—என் தாய்க்குக் கூட அவர் உதவியையே கடைசி வரை எதிர்பார்த்து, வாழ்க்கை நடத்துவதென்பது சிறிதும்