பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மிகத் தவறான பிரச்சாரம் முனைப்பாக மக்களிடையே தொடர்ந்து செய்யப்பட்டது. இதைப்பற்றி,

“இஸ்லாம் உலகிலேயே மிகவும் தவறாக விவரிக்கப்பட்ட - தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் என்று உண்மையிலேயே உணர்கிறேன்” என்று பி.பி.சியில் ‘இஸ்லாம் நம்பிக்கையும் சக்தியும்’ (Islam-Faith and Power) என்ற தொடரைத் தயாரித்தளித்த ரோஜர் ஹார்டி என்பவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை பொதிந்த உணர்வாகும். உண்மையின் ஒளியை நீண்டகாலத்துக்கு மூடிமறைக்க இயலாது என்பதற்கு இஃது ஒரு சான்று!

இத்தவறான கருத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, ஆட்சி அதிகாரத்திலிருந்த முஸ்லிம்கள் வாள் வலிமையை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் முஸ்லிம் அல்லாதவர்கள் யாரையுமே இந்நாட்டில் காணும் வாய்ப்பு இன்று ஏற்பட்டிருக்காது. இஸ்லாம் தவிர வேறு மதங்கள் அனைத்துமே மறைந்து போயிருக்கும். ஆனால் அத்தகைய நிலை எதுவும் ஏற்படவில்லை. அன்று போலவே இன்றும் முஸ்லிம்கள் இந்நாட்டில் சிறுபான்மையினராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்பது கற்பனையாகப் புனைந்துரைக்கப் பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, இஸ்லாமியக் கோட்பாடும் திருக்குர்ஆன் இறைமொழியும் அண்ணலார் வாக்கும் இதைக் கடுமையாக எதிர்க்கிறது.

“நாவாலும் கரங்களாலும் தீங்கு விளைவிக்காதவனே முஸ்லிம்” என்பது நபி மொழியாகும். எவ்வகையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்தி மற்றவரை இஸ்லாமிய நெறியின்பால் இணைப்பது இஸ்லாமிய நெறிமுறை களுக்கு முற்றிலும் நேர்மாறான, முரண்பட்ட செயலாகும்” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.