பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

“இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை” என்பது திருக்குர்ஆன் திருமறை தரும் வாக்கமுதமாகும்.

காஷ்மீரப் பகுதியில் எக்காலத்தும் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடைபெற்றதில்லை. ஹிந்து மன்னர்களின் ஆட்சி மட்டுமே அண்மைக்காலம்வரை நடைபெற்றது. ஆனால், காஷ்மீரத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களேயாகும். அதேபோன்று, கேரளப் பகுதியிலும் எக்காலத்தும் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடைபெற்றதாக வரலாறே இல்லை. ஆனால், கேரள மாநில மக்களில் கணிசமான எண்ணிக்கையினர் முஸ்லிம்கள் ஆவர். இவற்றிலிருந்து முஸ்லிம் மன்னர்களின் ஆதிக்கம் ஆட்சி அதிகாரங்களின் துணையோடு வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற கற்பனைக் கூற்று வேரற்ற மரமாக வீழ்ந்து விடுகிறது.

ஆரம்பத்தில் இஸ்லாம் பரவிய காலத்தில் முஸ்லிம்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாயினர். மற்றவர்களின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டதைக் கொண்டு அவர்கள் இஸ்லாத்தை வாளால் பரப்பினர் எனக் கதைகட்டி விடலாயினர். இஸ்லாத்தின்மீது காழ்ப்பும் முஸ்லிம்கள்மீது வெறுப்பும் கொண்ட ஆங்கில வரலாற்றாசிரியர்கள்.

தொடக்க காலம் முதலே தொடர்புண்டு

இந்தியாவைப் பொறுத்தவரை, பெருமானார் அரபகத்தில் பிறந்து இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கும் முன்பிருந்தே அரபு நாட்டிற்கும் இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. வணிக நிமித்தம் இத்தொடர்பு வலுவாக இருந்து வந்துள்ளது என்பதற்கு இலக்கியங்களும் சான்றுரைத்து நிற்கின்றன.