108
ஈச்சம்பாய்
கொலையாளிகளுக்குள் சிறிது குழப்பம். போதாக்குறைக்கு அந்தக் குழந்தையின் வாயில் கொள்ளைச் சிரிப்பு... கண்களை ஓரம் சாய்த்து கைதட்டுகிறது: இடுப்பில் கை வைத்து கழுத்தை கேள்வியாக்கிச் சிரிக்கிறது. கள்ளச் சிரிப்போ... கேலிச் சிரிப்போ... ஆனாலும், கொள்ளைச் சிரிப்பு. ஒருத்தன் துண்டைப் பிடித்து இழுக்கிறது; இன்னொருத்தன் கையைப் பிடித்து செல்லமாகக் கடிக்கிறது.
அதற்குள் சாலையின் மேல் முனையில் உளவு பார்த்த இருவர் ஓடிவருகிறார்கள். ராட்சதக் கல்மேட்டில் நின்றவர்கள், எக்கி எக்கிப் பார்த்துவிட்டு கீழே குதிக்கிறார்கள். ஓடியபடியே கத்துகிறார்கள்... சொல்லி முடிக்காமலே புதர்களுக்கள் தாவுகிறார்கள். தலையை எடுப்பதைவிட, தலை தப்பித்தால் போதும் என்கிற உயிர்பயம். அல்லது உயிர் ஆசை... ஆசை, பயமான யதார்த்தம்.
“ஓடுங்க, ஓடுங்க... ஆயுதப்படை போலீஸ் வருது, துப்பாக்கி வேனுக்கு துருத்தி நிக்குது. ஓடுங்க. ஓடுங்க, ஏய் சின்னச்சாமி! கூட்டி வந்து கழுத்தறுத்திட்டியடா... ஊருக்கு வா , பாத்துக்கிறோம்... ஓடுங்கப்பா ஓடுங்க.”
அந்த வேனுக்குள் எல்லோரும், சண்டியரையும், வேல் கம்பரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். வெட்டிவிட்டு ஓடணுமா.. இல்ல வெட்டாமலே ஓடணுமா?
அந்தப் பயணிகளில் பாம்படக் கிழவி ஒருத்தி உறை நிலையிலிருந்து உயிர் நிலைக்கு வந்து, சண்டியனின் மோவாயைத் தாங்கியபடியே பேசினாள். அவளுக்குள் லேசான பயத் தெளிவு.
“இந்தாப் பாரு மவராசா... மாடு முட்டி மாடு செத்ததில்ல. மனுஷன் வெட்டி, மனுஷன் சாகலாமாய்யா?... வண்டியில வார