பக்கம்:ஈச்சம்பாய்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


ஆம்! சமுத்திரத்தின் எகத்தாள நடைக்கு எடுத்துக்காட்டுகள் இவை.

கதை மாந்தர்களின் மன உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகக் காட்டும் உரையாடல் பகுதிகள் பல. அவற்றுள் இரண்டு:

எந்தக் குற்றமும் செய்யாத தங்களைக் கொலை செய்ய வரும் கூட்டத்தினரைப் பார்த்து "எங்க முகத்தப்பாருங்கய்யா... நாங்கெல்லாம் ஒங்களுக்கு எதிரியாய்யா? என்ன தப்புயா செய்தோம்? அதையாவது சொல்லிட்டு வெட்டுங்கய்யா" என்று முறையிடும் பகுதி ஒன்று.

மொழி வழக்குகள்

தென்தமிழ் நாட்டைச் சார்ந்த சமுத்திரத்தின் கதைகளில் அந்தப் பகுதிப் பேச்சு வழக்கும், வட தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கும் கைகோர்த்துச் செல்கின்றன. அடித்தட்டு மக்கள் வழக்கோடு, அக்கிரகாரத்து வழக்கையும் அழகாகப் பதிவு செய்துவிடுகிறார். தொலைக்காட்சித் 'தமிங்கிலமும்' அவர் பார்வைக்குத் தப்புவதில்லை.

"ஏளா எருமைமாடு....அப்பா சொல்லுறது காதுல விழலே....ஒன் சோலியப் பாத்துட்டுப் போயேம்ளா....முடிச்சாச்சா"

"முடிச்சாச்சு...இன்னுமாளா நிக்கே..."

- இது தென் வழக்கு (118)

"என் கொயந்த... என் கொயந்த...என் கொயந்தயத் தூக்கிக்கினு போறான். கொயந்தய வாங்குங்க..." - இது வட தமிழ்நாட்டு அடித்தட்டு வழக்கு (142)

"நோக்கு இப்போ இருபத்தெட்டு வயசு இருக்குமோ? கல்யாணம் ஆகி ஆறு வருஷம்தானே இருக்கும்? கடைசி வரைக்கும் ஒன் ஆத்துக்காரர் எப்படி இருக்கார்னு பாருடி. இவரும் நானும் வாழ்ந்த வாழ்க்கையும் இவர் என்னை வச்சுண்டிருந்த நேர்த்தியும் லோகத்துல யாருக்கும் வராதுடி..."

இது எல்லோருக்கும் தெரிந்த வழக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/14&oldid=1495097" இலிருந்து மீள்விக்கப்பட்டது