மனித உடலை மதிக்காமல், சிறிதும் நினைக்காமல், ‘ஏனோ தானோ' என்று வாழ்வதால்தான், எத்தனையோ பெயர் இல்லாத நோய்களெல்லாம் இன்று மனித இனத்தைக் குதிரை ஏறிக் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது.
பணத்தையே பிரதானமாக எண்ணி, ஆசைப்படுகின்ற மனித இனம், வர வர வேதனைகளுக்கு விளை நிலமாகிக் கிடக்கும் ஓர் இழிவான நிலைக்கு ஆட்பட்டிருக்கிறது.
வந்த நோயைத் தடுப்பதில் முனைப்பாக இருப்பதை விட, வரும் முன்பே தற்காப்புடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை, முன்னோரின் அறிவுரையும் அது தானே!
இந்த நூல் உடல் நலம் காப்பது என்பதைக் குறித்துக் காட்டி, அடிக்கடி வந்து தொலைக்கின்ற ஒரு சில நோய்களுக்கு உரிய காரணங்களைக் காட்டி, போக்கும் முறைகளையும் விளக்குவதற்காக எழுதப்பட்டுள்ளது.
நோய்க்கான விளக்கம், நோய் பிறப்பதற்கான சூழ்நிலை, அடிப்படைக் காரணம், அதனால் ஏற்படும் உடலின் மாற்றங்கள், மருந்தை அதிகம் உண்ணாமல், நோய் தீர்க்கும் சில வழிகள் - இவைகள் தான் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன.
நல்ல உடல், நல்ல மனம், நல்ல வாழ்வு என்னும் வாசகத்தைத் தழுவியே, நான் எழுதும் நூல்கள் உருவாகின்றன. மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. அந்த வரிசையிலே, உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள் எனும் இந்த நூலும் உங்கள் கையில் தவழ்கிறது.