பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298


“நான் உன்னை என்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தேன்” என்று அவன் தன் எண்ணத்தை வெளியிட்டு விட்டுச் சிரித்துக் கொண்டே “நான் பழைய உமார்தான். இபுராகீம் மகன்தான்! வேறு யாருமல்ல!” என்று கூறினான்.

அவள் கண்களில் கவிந்திருந்த பயம் அகன்றது. உதடுகள் குவிந்தன. அவனுடைய முகத்தைத் தன் முகத்தோடு அழுத்திக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான். படகு மிதந்து கொண்டே யிருந்தது. சிங்க உருவத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.


36. எதற்கும் துணிந்த புது மதத்தலைவன்

இரண்டாவது நாள் காலையில் உமார் விழித்து எழுந்திருக்கும் போது, அவனைச் சந்திப்பதற்கென்று ஹாஸான் சென்றான். முன்னாலேயே அறிவிக்காமல், அவன் திடுமென்று அந்த அறைக்குள்ளே நுழைந்ததும் அந்தக் கரிய அடிமைப் பையன் பயந்து ஓடிப் போனான். கவனமாகக் கதவை முடிக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த உமாரின் பக்கத்திலே விரிப்பில் உட்கார்ந்து கொண்டான். மெல்லிய குரலிலே அவனுடன் பேச்சுக் கொடுத்தான். உமார் புரண்டு படுத்தான்.

“நீ எங்கே போயிருந்தாய்? சொல்!”

சிறிது நேரம் உமார் அறையின் மேற்பகுதியைப் பார்த்தான். அவனுடைய கண்ணுக்குக் கீழே இருண்ட நிழல் உருவங்கள் இருந்தன. ‘தூங்கிக் கனவு கண்டு கொண்டிருந்தேன்!”

“அது ஒரு கனவா?”

“இல்லை, ஓரளவு கனவுதான்.ஆனால் எல்லாம் கனவென்று சொல்ல முடியாது.”

“அப்படியானால் நீ எங்கே போயிருந்தாய்?” - இது போன்ற மாயமான தூக்கத்திலிருந்து எழும் மனிதர்களிடம் ஹாஸான் இதுவரை நூற்றுக் கணக்கான தடவைகள் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறான். அந்த நூற்றுக் கணக்கானவர்களும் கூறிய அதே பதில்தான் கிடைக்குமென்று நம்பிக்கையுடன் அவன் உமார் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.