48
அழுகையெல்லாம் எங்கேயோ போய்விட்டது. உமாரின் கைபட்டதும் அழகியின் நாடித் துடிப்பு அதிகமாகியது. அவளை உமார் தன் கைகளுக்குள்ளே வாஞ்சையோடு அணைத்துக் கொண்டான். தான் போர்த்தியிருந்த துணியை எடுத்து இருவருக்கும் சேர்த்துப் போர்த்திக் கொண்டான். குழம்பிய சததியும், இராக்காற்றும், ரஹீமின் சாவுப் புன்னகையும் தன் நினைவைவிட்டு இப்பொழுதாவது அகலும் என்று எதிர்பார்த்தான்.
தன் தோளுக்குக் கீழே புரண்டு கொண்டிருந்த தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்வதற்காக அழகி ஸோயி அசைந்தாள். உமாரின் பக்கமாகப் புரண்டாள். அப்பொழுது உமாரின் உதடுகள் அழகியின் கழுத்தில் பதிந்தன. தேகத்தின் கதகதப்பும் கூந்தலின் மணமும் உமாருக்கு இதமாக இருந்தன. அந்தக் கதகதப்பே ஒரு வேட்கையாக மாறி உமாரின் களைப்பையெல்லாம் மறக்கடித்தது.
அழகி ஸோயியின் ஒவ்வொரு அசைவும் உமாரிடம் தன்னை மறந்த ஒரு நிலையையுண்டாக்கின.
அந்த இரவிலே அழகியின் கையணைப்பிலே, போர்க்களச் சகதியும், நண்பனின் சாவும் உமாருக்கு மறந்து போய்விட்டன. அமைதியாக மூச்சுவிட்டுக் கொண்டு உலக நினைவு எதுவுமில்லாமல் உமார் அயர்ந்து உறங்கினான்!
உமார் தன் தந்தை இறந்த பிறகு தன் நண்பன் ரஹீமின் வீட்டிலே உல்லாசமாக வாழ்ந்தவன். ஆனால் போர்க்களத்திலிருந்து அவன் திரும்பி வந்ததும், ரஹீமின் சாவுச் செய்தியைக் கொண்டுவந்த அவனை ரஹீமின் பெற்றோர்கள் துர்க்குறியென்றே நினைத்துக் கடுமையாக நடத்தினார்கள். அவன் அழைத்து வந்த அழகி ஸோயியையும் அடிமைச் சந்தையிலே விற்பதற்காகப் பறித்துக் கொண்டு போய்விட்டார்கள். உமார் தங்குவதற்கு இடமில்லாமல் நிஜாப்பூர் பட்டணத்தின் தெருக்களில் சில நாட்கள் அலைந்தான். ஒரு காலத்தில் தன் உயிர் நண்பனோடு உல்லாசமாகத் திரிந்த வீதிகளில் இப்போது நடமாடுவதுகூட அவனுக்குப் பொறுக்க முடியாத துயரமாக