இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26
இவள். வாயு வேகம் மனோவேகம் என்று சொல்வார்களே, அந்த மாதிரி பறக்கிறாள்.
விநாடிக்குப் பத்தொன்பதாயிரம் மைல் வேகத்திலே பறக்கிறாள்.
எலக்ட்ரானைக் காதலி என்றேன். புரொதானைக் காதலன் என்றேன். இந்தக் காதலன் காதலி திருவிளையாடல் எங்கே நடைபெறுகிறது தெரியுமா? பரமாணுவிலே.
பரமாணுவின் நுண் கரு இருக்கிறதே, அங்கேதான் இருக்கிறான் காதலனாகிய புரொதான். அவனைச் சுற்றி வந்து நடனம் ஆடுகிறாள் காதலியாகிய எலக்ட்ரான்.
சிவசக்தி தாண்டவம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். அது, பரமாணுவிலே நடைபெறுகிறது.
அண்ணன், தம்பி ஆகிய இருவரும் சிறுவர்; சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அண்ணன் தம்பியை அடிக்கிறான். உடனே தம்பி கூச்சல் போடுகிறான்.