பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

உலக வரலாற்றில்


சுதந்திரப் போராட்ட செய்திகளை நாடெங்கும் பரப்பவும் போராட்டக் கொள்ளைகளுக்கு விளக்கம் தந்து வழிகாட்டவும் ‘முன்னோற்றம்’ என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றை சி.ஆர். தாஸ் துவக்கினார். அதன் ஆசிரியர் பொறுப்பை அவர் சுபாஷ்க்கு வழங்கினார். பெரும் மகிழ்ச்சியுடன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சுபாஷ் தனது எழுத்து வன்மையால் நாட்டிற்கு அருந்தொண்டு ஆற்றினார்.

இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா தலைமையில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, சுபாஷ் முழுநேரத் தொண்டராகப் பொதுவாழ்வில் ஈடுபட்டார். கனல் கக்கும் தனது பேச்சு வன்மையால் இளைஞர்களைக் கவர்ந்தார். அவர்களை சக்திவாய்ந்த தொண்டர்காளாக உருவாக்கினார். அதனால் புதிய ஒரு தொண்டர் படையை அமைத்து அதன்தளபதியாக செயலாற்றினார். நாடெங்கும் இருந்த தீவிர இளைஞர்களைத் திரட்டி இராணுவம் போல கட்டுப்பாட்டுடன் அந்தப் படையை நடத்தினார்.

தீவிரவாதிகள் அனைவரும் போஸ் தலைமையில் திரண்டனர். தீவிரமான திட்டங்களையும் தீட்டினர். உணர்ச்சிமிக்க கருத்துக்களை பேசினர். இப்படிப்பட்ட புரட்சிகரமான போக்கில் சுபாஷ் செல்வாரேயானால் ஒரு பயங்கரபுரட்சியாளனாக எதிர்காலத்தில் மாறிவிடுவாரே என்று ஆங்கிலப் பேரரசு அஞ்சி நடுநடுங்கியது.