பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்த்துணை

99

பாடலை இப்போது பார்க்கப் போகிறோம். நம்முடைய வாழ்வின் கடைசிக்குப் பயன்படும் பாடலாகவும் அது இருக்கிறது. யம பயத்தைப் போக்குவதற்கு அமைந்த அற்புதமான பாட்டு அது. முருகப்பெருமானுடைய திருவருள் துணை நமக்கு இருக்கும்போது யமனுக்கு ஏன் அஞ்ச வேண்டுமென்ற உணர்ச்சியைத் தருவது அது. "ஆறு முகவன் வேலும், அஞ்சேல் என்ற திருக்கரமும் எனக்கு மெய்த்துணை, ஆகவே நான் காலனுக்கும் அஞ்சமாட்டேன்" என்று அருணகிரி நாதர் இந்தப் பாடலில் சொல்ல வருகிறார்.

பயத்திற்குக் காரணமான காலனை வருணிக்கிறார். அஞ்சுவதற்குரிய ஆயுதங்களும், உருவமும் அவனிடம் இருக்கின்றன. அவன் சூலத்தை ஏந்தி வருகிறான். கள்ளனுக்குப் பயந்து ஓடி ஒளித்துக் கொள்ளலாம். காவலனுக்கும் பயந்து ஓடி ஒளித்துக் கொள்ளலாம். ஆனால் யமனுக்குப் பயந்து ஓடி ஒளித்துக்கொள்ள முடியாது. காற்றுக்குள் நுட்பமாக நுழைந்தாலும் அவன் அங்கே வந்து சேருவான். இப்படி நம்மைத் தொடர்ந்து வருகின்ற காலனுக்குப் பயப்படாத நிலை இறைவனுடைய திருவருளால்தான் உண்டாகும். "நான் காலனுக்கு அஞ்சமாட்டேன்" என்று அருணகிரி நாதர் சொல்கிறார்.

சூலம் பிடித்து எமபாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒரு காலும் அஞ்சேன்.

முன்பும் சூலத்தையும்,பாசத்தையும் அருணகிரிநாதர் நினைப்பூட்டியிருக்கிறார். சூலத்தினால் குத்தி, பாசத்தினால் இறுக்கிக் கட்டிக்கொண்டு போகிறானாம். இறந்து போகின்றவன் துடிதுடித்து வாயில் நுரை கொப்புளிக்க, கண் பிதுங்க அவஸ்தைப் படுவதைப் பார்த்து, எமன் சூலத்தால் குத்தி, கயிற்றினால் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுக்கிறான் என்ற உருவகம் உண்டாயிற்று என்று தோன்றுகிறது.