பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

129

"ஏதோ ஓரிடத்தில் வேறு யாரிடமோபேசினீர்களே!" என்று கேட்டேன்.

"எதிரே ஒருவர் காரில் வந்தார். போகிற வழியில் யானை இருக்கிறது என்று எச்சரிக்கை செய்தேன்."

"நீங்கள் ஏதோ அலியா என்றல்லவா சொன்னீர்கள்?" என்று கேட்டேன். "சிங்களத்தில் அலியா என்றால் யானை என்று பொருள். இப்படி நம்முடைய பயணத்தில் உங்களால், உங்களுடைய பக்திச் சிறப்பினால், எனக்குத் தைரியம் உண்டாயிற்று. நாம் பிழைத்தோம்" என்று சொல்லி முடித்தார் கார் ஓட்டி.

அவர் சொன்னதைக் கேட்டவுடன் என்னால் பேச முடியவில்லை. என் கண்களில் நீர் முட்டியது. தொண்டை அடைத்துக் கொண்டது. என்னுடைய உள்ளம் அருண்கிரி நாதப் பெருமானுடைய பரம உபகாரத்தை எண்ணி உருகியது. உடனே பேச வேண்டுமென்று எண்ணியும் என்னால் பேச முடியவில்லை. சிறிது நேரம் கழித்துப் பேசினேன்; "ஐயா, உங்களால் எனக்கும் அருணகிரிநாதப் பெருமானுடைய திருவாக்கின் சிறப்புப் புலனாயிற்று. கந்தர் அலங்காரத்தின் பயனைச் சொல்லும்போது,

கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன்னூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே

என்று சொல்லியிருக்கிறார். அதை வெறும் சொல்லளவில் நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எத்தனை பொருளுடையது என்பதை உங்கள் வாயிலாக இன்று அறிந்தேன். முருகனுடைய திருவருள் இன்று எனக்கு இந்த உரையை உணர்த்தியது. என்றைக்கும் இதை நான் மறக்கமாட்டேன்" என்று சொன்னேன்.