பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

9

அவற்றைத் தாபத்திரயம் என்று சொல்வார்கள். ஆதியாத்மிகம், ஆதிபெளதிகம். ஆதிதெய்விகம் என்பவை அவை. இறைவனுடைய திருவுருவம் உள்ளத்தில் குதிகொண்டவுடன் அங்கே அருள் மழை பொழிந்தது. அதனால் தாபங்கள் எல்லாம் போய்விட்டன.

"திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே"

என்று திருவிசைப்பாவில் ஒரு பாட்டு வருகிறது.

திருவடி

முருகப் பெருமான் குருநாதனாக எழுந்தருளினான் என்று சொல்லும்போது அவன் அடையாளங்களை விரிவாகச் சொல்ல வருகிறார் அருணகிரியார். திருவடி முதல் திருமுடிவரையில் சொல்வதைப் பாதாதிகேசம் என்று சொல்வார்கள். மனிதர்களை வருணிக்கும்போது கேசாதிபாதமாக வருணிப்பதும், தெய்வங்களை வருணிக்கும்போது பாதாதிகேசமாக வருணிப்பதும் முறை. அந்த வகையில் இங்கே குமரகுருபரனுடைய பாதாதிகேச வருணனையைச் செய்கிறார்.

தெய்வத்தையும் பெரியவர்களையும் காணும்போது அவர்கள் முன் விழுந்து திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும். குழந்தை தாயோடு விளையாடும்போது பல வகையில் விளையாடும். தாயின் முகத்தோடு முகம் சேர்த்து விளையாடும். கழுத்தைக் கட்டிக்கொண்டு விளையாடும். சில சமயங்களில் தோளில் ஏறும்; இடுப்பிலும் ஏறும். ஆனால் அதற்குப் பசி மிகும்போது அதனுடைய நோக்கம் எல்லாம் பால் தரும் அவயவத்தில் இருக்கும். அதுபோல் இறைவனுடைய அருளுக்காகப் பசித்த அடியார்கள் அவனுடைய திருவடியைப் பற்றிக்கொண்டிருப்-