பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

33

அறிவு, அறியாமை என்ற இரண்டு வேறுபாடுகள் நம்மிடத்தில் இருக்கின்றன. இந்திரியங்களால் ஒன்றை அறிந்துகொள்வதுகூட ஒருவகை அறிவுதான். அறிவும் அறியாமையும் அற்ற இடத்தில் இருப்பவர்கள் பெரியவர்கள்.

"அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே"

என்று கந்தர் அநுபூதியில் அருணகிரியார் பாடுகிறார். அறிவு என்பது சகலம் அறியாமை என்பது கேவலம். அறிவு என்பது பகல்; அறியாமை என்பது இரவு. அறிவு என்பது தெளிவு; அறியாமை என்பது மயக்கம். இந்த இரண்டும் இல்லாத நடுநிலை இரவும்,பகலும் அற்ற நிலை. அந்த நடு நிலையில்தான் மனம் அடங்கி இருக்கும். கடவுளுடைய திருவுருவம் நன்றாகப் பதியும். 'அத்தகைய இடம் ஒன்றை எனக்குக் காட்டி, தியானம் பலிக்கும்படியாகச் செய்யவேண்டும்' என்ற விண்ணப்பத்தை அருணகிரியார் சொல்கிறார்.

இராப்பகல் அற்ற இடம் காட்டி யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையந் தாள் அருளாய்.

இரண்டு விதத் தடை

தியானம் பண்ண உட்கார்ந்தால் நமக்கு இரண்டுவிதமான தடைகள் வரும். பெரும்பாலான தடை புறத்திலிருந்து வருவது. பூசை பண்ண உட்காருவான். வாசலில் செருப்புத் தைக்கிறவன் பேசுகிற பேச்சும், உள்ளே குழந்தை விளையாடுகிற விளையாட்டு ஒலியும், அழுகைச் சத்தமும் வந்து பாதிக்கும். அது ஏன், இது ஏன் என்று கேட்டுக் கொண்டே ஜபம் செய்வான். புறத்திலிருந்து வருகிற ஒலிகள் நம்முடைய மன ஒருமைப்பாட்டைக் குலைக்கும். இவைகள் எல்லாம் காதில் படாமல் ஏதாவது ஒரு தனி அறையில் போய் உட்கார்ந்தால் அப்போது பல நினைவுகள் உள்ளிருந்து தோன்றும். மனம் எங்கேயாவது போய்

3