68
உள்ளம் குளிர்ந்தது
அப்போது அவன் அருகில் ஒருவன் வந்து "உனக்கு அல்வா என்றால் பிரியம் ஆயிற்றே! இந்தா இதை உண்ணு" என்றால் உண்ணுவானா? தண்ணீர் தண்ணீர் என்று கதறிக்கொண்டு ஓடுவான். அவனுக்கு அடுத்த கணத்தில் தண்ணீர் வேண்டும். அதுபோல் இறைவனிடத்தில் பக்தி உண்மையாக முறுக வேண்டுமானால் மரண பயம், தீப் பிடித்தவனுக்கு உண்டான உணர்ச்சியைப் போல இருக்கவேண்டும். உள்ளீரலில் அந்தப் பயம் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்தக் கணத்திலேயே இதற்கு மாற்றுத் தேட வேண்டுமென்ற ஆர்வமும், வேகமும் உண்டாகும். நாமோ அப்படிக் கவலைப்படுவதில்லை. மரண பயத்தைப் போக்கும் வழியை நாடுவதில்லை. மாட்டுவண்டிக் காரனைப் போலவும் மற்றவர்களைப் போலவும் இருக்கிறோம்.
என்று வருமோ?
நாம் எவ்வளவோ காரியங்களை மேற்போட்டுக் கொண்டிருக்கிறோம். அவற்றை எல்லாம் ஒரு விதமாகக் குறிப்பிட்ட காலத்தில் நிகழும்படி செய்யலாம். ஆனால் மரணம் என்பது எந்த நேரத்தில் நமக்கு வருமோ தெரியாது. யமனுடைய வாய் திறந்து கொண்டிருக்கிறது. எப்போது அதை மூடிப் பல்லால் உயிரைக் கடித்துத் துன்புறுத்துவானோ, தெரியாது.
"யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்"
என்பர் ஞானசம்பந்தர். எந்தக் கணமும் நாம் இறந்து போகலாம். ஆகையால் ஒவ்வொரு கணமும் மரணத்தின் வாயிலில் இருப்பதாக எண்ணி உணர்ந்து உண்மையான அச்சத்தை அடையவேண்டும். அச்சத்தைப் போக்கும் பெருமான் முருகன். அவருடைய திருவருளினால் மரண பயம் போகும் என்பதை நன்றாகத் தெளிந்து அவனை நம்பி