இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பார்த்தீரா நமது தூதாம்
பண்டாரம் முக அமைப்பை?
போர்த்துள்ள துணியைக் கொண்டு
முக்காடு போட்டு, மேலே
ஓர் துண்டால் கட்டி மார்பில்
சிவ லிங்கம் ஊச லாட,
நேரினில் விடியுமுன்னர்
நெடுங்கையில் குடலை தொங்க,
வருகின்றார்; முகத்தில் தாடி
வாய்ப்பினைக் கவனித்தீரா?
பரிவுடன் நீரும் அந்தப்
பண்டார வேஷம் போடக்
கருதுவீரா என் அத்தான்?
கண்ணெதிர் உம்மைக் காணும்
தருணத்தைக் கோரி, என்றன்
சன்னலில் இருக்கவா நான்?
அன்னையும் தந்தை யாரும்
அறையினில் நம்மைப் பற்றி
இன்னமும் கட்சி பேசி
இருக்கின்றார்; உம்மை அன்று
புன்னையில் கட்டிச் செய்த
புண்ணிய காரியத்தை
உன்னத மென்று பேசி
உவக்கின்றார் வெட்க மின்றி!