இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணி முத்து மணி சுமக்கும்
மாடுகள் அலுத்துப் போகும்.
வணிகர்கள் அதிக தூர
வாய்ப்பினால் களைப்பார் நெஞ்சில்
தணியாத அவள் நினைவே
பொன் முடி தனக்கு நீங்காப்
பிணி யாயிற் றேனும், அந்தப்
பெரு வழிக் கதுதான் வண்டி!
இப்படி வடநாட்டின் கண்
டில்லியின் இப்புறத்தில்,
முப்பது காதமுள்ள
மகோதய முனி வளத்தில்,
அப்பெரு வணிகர் யாரும்
மாடுகள் அவிழ்த்து விட்டுச்
சிப்பங்கள் இறக்கிச், சோறு
சமைத்திடச் சித்த மானார்.
அடுப்புக்கும் விறகி னுக்கும்.
இலைக் கலம் அமைப்ப தற்கும்,
துடுப்புக்கும், அவரவர்கள்
துரிதப்பட் டிருந்தார். மாவின்
வடுப் போன்ற விழிப் பூங்கோதை
வடிவினை மனத்தில் தூக்கி
நடப்போன் பொன்முடிதான், அங்கோர்
நற்குளக் கரைக்குச் சென்றன்.
53