பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

பெரும்பாலான மக்கள் அக்கரை காட்டத்தான் செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியிலே உள்ள பகுத்தறிவுத் தோழரானாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள சீர்திருத்த நண்பரானாலும் அல்லது வேறு எந்தக் கட்சிக்காரர் ஆனாலும் சீர்திருத்த முறையில்தான் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் எந்த விதமான மாறுபட்ட கருத்துக்களும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இதைப் போலவே எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பார்ப்பனருக்கு அடுத்த ஜாதி நாங்கள்தான் என்று பெருமை பேசிடும் முதலியார் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அல்லது செட்டியார், நாயுடு, க்ஷத்திரியர் என்று கூறிக்கொள்ளும் எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அந்தந்த வகுப்பிலுள்ள பெரும்பாலான வாலிபத் தோழர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சீர்திருத்த திருமணங்கள் செய்து கொள்வதிலே பெரிதும் அக்கரை காட்டுகின்றனர்.

இன்று எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் உலக நிகழ்ச்சிகளைக் கொண்டு முன்னேற விரும்புகிறார்கள். தெளிந்த அறிவுகாட்டும் நல்ல போக்கின்படி, நடக்கத் துணிவுகொண்டுள்ளனர். எனவேதான் நாள்தோறும் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்று வரும் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் எவ்வளவு சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றாலும், இன்னமும் சாதாரண மக்களிடையே இப்படிப்பட்ட மண முறை முறைகளைப் பற்றிய தவறான கருத்துக்களும் பொருத்தயற்ற சந்தேகங்களும் தோன்றாது, அடியோடு மறைந்துவிடவில்லை. எதிர்ப்புகள் அன்று போல அதிக அளவில் இல்லாமலிருக்கிறதே தவிர எதிர்ப்பே இல்லையென்ற நிலை ஏற்பட்டுவிடவில்லை யென்பதை நாம் உணரத்தான் வேண்டும்.