பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இன்று சீர்திருத்த திருமணங்கள் ஏராளமாக நடை பெறுகின்றன. அதுவும் மிகத் தாராளமாக நடைபெறுகின்றன. என்றாலும் எதிர்ப்புகள் அங்கங்கே இருக்கத்தான் செய்கின்றன. இப்போது இங்கு நடைபெறுகின்ற திருமணத்திற்குக் கூட ஏதோ எதிர்ப்புகள் இருந்ததாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.


இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களைக் கண்டு சிலர் பயப்படுவதற்குக் காரணமே கிடையாது. நாங்கள் என்ன நடக்கக்கூடாது எதையும் செய்யவில்லையே! என்றைக்கும் போல ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணுக்குந் தானே இங்கே திருமணம் நடத்தி வைக்கிறோம். அதிலும் ஆணின் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்து மணப்பந்தலில் நிறுத்திவிட்டு அதன் பின்னர் அதோ இருக்கும் அந்தக் பெண்தான் உனக்கு மனைவியாகப் போகிறவள் என்று கூறவில்லையே!

ஆணும் சரி, பெண்ணும் சரி, முன்னதாகவே ஒருவரைப்பற்றி மற்றவர் நன்றாக அறிந்து தெரிந்துகொண்ட பின்னர் தானே திருமணம் நடைபெற வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம்; செய்கிறேம்.

ஒரு ஆணுக்கும், மற்றொரு ஆணுக்கும், அல்லது ஒரு பெண்ணுக்கும், மற்றொரு பெண்ணுக்குமா திருமணம் நடத்துகிறோம்? இல்லையே! அப்படி ஏதாவது அக்கிரமமான காரியங்கள் செய்தால், செய்ய வேண்டு மென்று பேசினால், ஆகா, அக்கிரமக்காரர்கள், ஆகாத காரியம் புரி என்று எங்களைக் கண்டிப்தற்கு இடமேற்படும். ஆனால் நாங்கள் அப்படி ஏதும் செய்யவில்லையே!

நாங்கள் இங்கே திருமணம் செய்துகொள்ளும் மண மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணைவர்களாகிறோம் என்று இன்று எடுத்துக்கொள்ளும் உறுதிக்குச் சாட்சிகளாகத்தான் வந்திருக்கிறோம். இங்கே கூடியுள்ள அத்தனை பேரும், உற்றார் உறவினர் உள்படவும் அதற்குத்தானே வந்துள்ளனர்.